சோழர் காலத்துச் சைவ சமய நிலை (கி.பி. 900-1133)

bookmark

முன்னுரை: பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தின ஆதித்த சோழன் காலம் முதல் சேக்கிழார் காலத்து அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் காலம் வரை - சைவ சமய நிலையை ஆராய்வதே இப்பகுதியின் நோக்கம். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகள், அவர்கள் பாடிய திருப்பதிகங்கள் முதலியன நன்றாகப் பரவி வளர்ந்த காலம் இச்சோழர் காலமே ஆகும். பல்லவ அரசருள் சைவர் பலர், வைணவர் பலர்,பெளத்தர் சிலர், சமணர் மிகச் சிலர். பாண்டிய மன்னருட் சைவர் பலர், வைணவர் சிலர், சமணர் மிகச் சிலர். ஆயின் சோழர் அனைவரும் சைவரே. மத மாற்றம் என்பது சோழ வரலாற்றிற் காண்டல் அரிது. பல்லவர்க்கு அடங்கிய் சிற்றரசராக இருந்தபொழுதும் சோழர் தம்மால் இயன்ற சிவத் தொண்டைச் செய்துதாம் வந்தனர். அவர்கள் பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தினவுடன், நாடெங்கும் சைவ சமய வளர்ச்சிக்கு முழுக் கவனத்துடன் பாடுபட்டனர். அவர்கள் காலத்தில் உண்டான புதிய கோவில்கள் பல; பாடல் பெற்ற பழைய கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன; கோவில்கட்கு ஏராளமான நிபந்தங்கள் விடப்பட்டன. விழாக்கள் சிறப்புற நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புதிய கற்றளிகள்: சோழப் பேரரசை உண்டாக்கின ஆதித்த சோழன்,முதற் பராந்தகன் முதலிய சோழ வேந்தர் தத்தம் பெயர்களைக்கொண்ட புதிய கற்கோவில்களைக் கட்டினர் பழைய கோவில்களைப் புதிக்கினர்.

இராசராச சோழன் பல ஆண்டுகள் உழைத்து எடுத்த தஞ்சைப் பெரிய் கோவிலை அறியாதார் உளரோ? அவன் அக்கோவிலுக்கு விடுத்த மானியம் அளவிடற் கரியது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்த கோவில்களிலிருந்து ஆடல் பாடல் வல்ல மகளிர் நானுற்றுவரைத் தஞ்சைப் பெரிய கோவிலில் அமர்ந்தினான். ஒவ்வொரு மகளுக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் மானியமாக விட்டான். 48 பேரை அமர்த்தித் திருப்பதிகம் ஓதச் செய்தான். இங்ஙனம் சோழர் கோநகரான தஞ்சாபுரியில் இராசராசன் எடுப்பித்த பெரிய கோவில் நடுநாயகமாக விளக்கமுற்று இருந்தது. இவ்வரசன் இலங்கை, பழையாறை, திருவலஞ்சுழி முதலிய இடங்களில் புதிய கோவில்களைக் கட்டினான். இவன் மனைவியரும் மக்களும் தமக்கையும் நாடெங்கும் செய்துள்ள சிவப் பணிகள் மிகப் பல ஆகும்.

இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை உண்டாக்கினான். அதில் கங்கைகொண்ட சோழீச்வரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினான். அக்கோவில் வியக்கதகும் வேலைப்பாடு கொண்ட மிகப்பெரிய கோவில். இராசேந்திரன் மகனான இராசாதிராசன் பல கோவில்களைக் கட்டினான். முதல் குலோத்துங்க சோழன் வேம்பற்றுார், கோட்டாறு, சூரியனார் கோவில் முதலிய இடங்களிற் கோவில்களை எடுப்பித்தான். இவன் மகனான விக்கிரம சோழன் திருமங்கலம், குற்றாலம்,உத்தமசோழபுரம் முதலிய பகுதிகளிற் சிவன் கோவில்களை எடுப்பித்தான். சோழ மன்னரைப் பின்பற்றி அவர்தம் பேரரசில் இருந்த சிற்றரசரும் பிரபுக்களும் எடுப்பித்த புதிய கோவில்கள் பலவாகும். இவை அல்லாமல், பாடல் பெறாதனவும் சோழர் காலத்தில் புதியனவாகக் கட்டப் பெறாதனவுமாக இருந்து சோழர் ஆட்சியில் புதுப்பிக்கப்பெற்ற கோவில்கள் பலவாகும்.

பாடல் பெற்ற கோவில்கள்: பாடல் பெற்ற கோவில்கள் பல முழுவதும் கற்கட்டடங்களாக மாற்றப் பட்டன. வேறு சில கோவில்களில் விமானம் மட்டும் கற்கட்டடங்களாக மாற்றப்பட்டது. சிலவற்றில் கோபுரம், திருச்சுற்று (பிராகாரம்) என்பவை புதுப்பிக்கப் பட்டன. இராசராசன் பாட்டியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணி ஆவர். அவரது பொருள் உதவியால் திருத்துருத்தி (தஞ்சை ஜில்லா குற்றாலம்). திருக்கோடிகா, திருவாரூர் அரநெறி, திருவக்கரை,திருமுதுகுன்றம் முதலிய கோவில்கள் கற்றளிகள் ஆயின. திருவையாறு, திருவெண்காடு முதலிய முப்பதுக்கு.மேற்பட்ட தலங்களில் உள்ள கோவில்கள் பொன்தானம், நிலதானம், பொன், வெள்ளிப் பாத்திரங்கள் முதலியவற்றைப் பெற்றனவாகும். பாடல்பெற்ற கோவில்கள் பலவற்றில் சித்திரை, வைகாசி, ஆணி, புரட்டாசி,கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்பது பல கோவில் கல்வெட்டுகளாற் புலனாகிறது. இவ்விழாக்கள் புதியனவாகச் சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்டவை என்பது அக்கல்வெட்டுகளிற் காணப்படாமையால், இவை அனைத்தும் நீண்ட காலமாகவே வழக்கில் இருந்தவை என்று கொள்ளத் தடை இல்லை.

மடங்கள்: சோழர் காலத்திற் புதிய மடங்கள் பல தோற்றுவிக்கப்பட்டன. ஆயின் சோழர் கல்வெட்டுகளிற் புதியன என்று கூறப்படாமல் சிறந்த நிலையில் இருந்த பழைய மடங்களும் பலவாகும். அவற்றுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கவை இவையாகும்.
(1) திருப்புகலூர் - நம்பி திருமுருகன் திருமடம்; (2) திரு ஆவடுதுறை - திருவீதி மடம், திருநீலவிடங்கன் மடம் முதலியன. (3) திருக்கழுக்குன்றம் - நமிநந்தி அடிகள் மடம்,; (4) திருவதிகை-வாகீசன் மடம், திருநாவுக்கரசன் திருமடம்; (5) திருமுதுகுன்றத்து மடம், (6) திருமங்கலம் - பரஞ்சோதி மடம்; (7) திருமணஞ்சேரி - பரசமய கோளரி மடம், (8) திருவையாற்று மடம்.

இம்மடங்கள் பலவற்றில் சிவயோகியர், மாவிரதியர், மாகேச்வரர்,அடியார், வேதியர், ஆண்டார் முதலியவரை உண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை பல கலைகளில் வல்ல சமயத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. இம்மடங்கள் தலயாத்திரை செய்யும் அடியவர் தங்கும் இடங்களாகவும், உள்ளதை இறைவன்பால் நிறுத்தி வீடுபேற்றை விரும்பும் முனிவர் தங்கும் அமைதி நிலவிய இடங்களாகவும், மக்கட்குச் சமயக் கல்வி புகட்டும் சமயப் பள்ளிகளாகவும் இருந்து சைவ சமயத் தொண்டாற்றி வந்தன. இவை கோவில்களை அடுத்து இத்தகைய நற்பணிகளில் ஈடுபட்டு இருந்தமையால் சைவ சமயப் பிரசாரம், சமண - பெளத்த சமயப் பிரசாரத்தை விஞ்சி விட்டது. சைவ சமயம் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

பலவகை அடியார்கள்:
1. மடங்களில் உணவு கொண்ட அடியவருட் சிவயோகியர் ஒரு சாரார். அவர்கள் சிவபெருமானைச் சிந்தித்தபடியே இருப்பவர். இறக்குந் தறுவாயில் உடம்பு முழுவதும் நீற்றைப்பூசிச் சிவமந்திரங்களைச் சொல்லிக்கொண்டே தங்கள் மார்பில் உள்ள லிங்கத்தைப் பூசிப்பவர். இவர்களை உண்பித்த கோவில்கள் பலவாகும்.
2. காலாமுகச் சைவருள் கடுமையான நோன்பினர் "மாவீரதியர்"எனப்பட்டனர். இவர்கள் மண்டை ஒட்டில் உண்பவர் பிணச் சாம்பலை உடலில் பூசிக் கொள்பவர். அப்பிணச் சாம்பலை உண்பர் தண்டு ஏந்தி இருப்பர். மதுப்பாத்திரம் கையில் வைத்திருப்பர். அம்மதுவில் கடவுள் இருப்பதாக எண்ணி வழிபடுவர், நரபலி இடுவர். இம்மாவிரதியர் ஆட்சியில் சில கோவில்களும் மடங்களும் இருந்தன.
3. மாகேச்வரர் லிங்கதாரணம் உடையவர்; சிறந்த பக்திமான்கள்;ஒழுக்கம் உடையவர்; துறவிகள். பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் இருந்தன.
4. அடியார் என்பவர் சிவனுக்குத் தொண்டு பூண்ட பக்திமான்கள்.
5. வேதியர் என்பவர் வேதங்களில் வல்ல பிராமணர்.
6. ஆண்டார் என்பவர் திருமுறை ஒதுபவர்; திருநந்தவனம் அமைப்பவர்; மலர் பறிப்பவர்; அடியார்க்கு அடியவர்; கோவிலிலும் திருவீதியிலும் பணி செய்பவர்; மடங்களில் குற்றமற்ற முறையில் வாழ்பவர். இவர்கள் அனைவரையும் உண்பித்த மடங்களும் திருக் கோவில்களும் பலவாகும்.

நாயன்மார் உருவச்சிலைகள்: நாயன்மார் உருவச் சிலைகளைக் கோவில்களில் வைத்து வழிபடல் அப்பர், சம்பந்தர்க்கு முன்பிருந்தே வந்த வழக்கமாதல் வேண்டும் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இவ்வாறு கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகளை எடுப்பித்தல் சோழர் காலத்தில் மிகுதிப் பட்டது.

1. திருவதிகைக் கோவிலில் திருநாவுக்கரசர்க்குத் தனிக் கோவில் ஒன்று "வாகீச்வரம்" என்ற பெயருடன் இருந்தது.
2. குகூர்க் கோவிலில் சுந்தரர்க்குக் கோவில் இருந்தது. அங்குச் சித்திரைத் திருவிழா நடந்தது.
3. செங்காட்டங் குடியில் சிறுத்தொண்ட நம்பி விழா நடைபெற்றது.
4. தஞ்சைப் பெரிய கோவிலில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் ஏற்பட்டது; பூசை சிறப்பாக நடைபெற்றது.
5. சண்டீசர் சிவலிங்க பூசை செய்தல் - அவர் தந்தையின் கால் வெட்டுண்டு கீழே விழுதல் - அம்மையப்பர் தோன்றிச் சண்டீகர்க்குச்"சண்டீசப் பதம்" தருதல் - இவற்றை விளக்கும் செப்பு உருவச் சிலைகள் தஞ்சைப் பெரிய கோவிவில் எடுப்பிக்கப் பெற்றன.
6. அதே கோவிலில் சுந்தரர், நங்கை பரவையார், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர் இவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன. அவற்றுக்குப் பல ஆடை அணிகள் வழங்கப் பெற்றன.
7. [14] "தத்தா! நமரே காண்" என்ற மிலாடுடையார் படிமம் ஒன்று அதே கோவிலில் எழுந்தருளப் பெற்றது.
-----
[14] "தத்தா! நமரே காண்" என்ற தொடர் மெய்ப்பொருள் நாயனார்
வரலாற்றில் உயிர் நாடியாகும். இதன் விளக்கம் பெரிய புராணத்திற் காண்க
8. அப்பெரிய கோவிலில் பைரவர், சிறுத்தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, சீராள தேவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுக்கப் பெற்றன. பல ஆடை அணிகள் வழங்கப்பட்டன.
9. திருமழபாடிக் கோவிலில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் திருமேனிகள் வைத்துப் பூசிக்கப்பெற்றன.
10. திருவொற்றியூர்க் கோவிலில் 63 நாயன்மார் உருவச்சிலைகள் எழுந்தருளப் பெற்றன. நாள்தோறும் பூசை செய்வதற்காக 75 கலம் நெல் தரப்பட்டது.
11. திருவாரூர்ப் பூங்கோவிலில் ஆளுடைய நம்பி, பரவை நாச்சியார் இவர்தம் உருவச்சிலைகள் இருந்தன. அவற்றின் பூசைக்காகச் சிற்றுார் ஒன்று தானமாக விடப்பட்டது.
12. திருவாமூர்க் கோவிலில் அப்பர் உருவச் சிலையும் சீகாழிக் கோவிலில் சம்பந்தர் உருவச்சிலையும் வைத்தும் பூசிக்கப்பெற்றன.

இங்ஙனம் பல கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகள் விளக்கமுற்றன. இவற்றுக்கு நாளும் பூசை நடந்தது; உரிய காலங்களில் விழாக்கள் நடைபெற்றன. இவை கல்வெட்டுகளால் அறியப்படும் செய்திகள். இப்பூசையாலும் விழாக்களாலும் நாயன்மார் வரலாறுகள் தலங்கள்தோறும் பொதுமக்கள் பால் பரவி வந்தன என்பது தெளிவாகின்றதன்றோ?

திருப்பதிகம் ஓதுதல்: கோவில்களில் திருப்பதிகம் ஓதுதல் நாயன்மார் காலத்திலேயே இருந்து வந்தது என்பதைச் சென்ற பகுதியிற் குறிப்பிட்டோம் அல்லவா? அப்பழக்கம் சோழர் காலத்தில் மிகுதிப் பட்டது என்பதைப் பல கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. திரு எறும்பியூர், திருப்பழுவூர், திரு ஆவடுதுறை, திருத்தவத்துறை, திருமுது குன்றம், திருவீழிமிழலை, திருநல்லம் திருச்சோற்றுத்துறை,திருமறைக்காடு, திருஆமாத்துார், தில்லை, திருவாரூர் முதலிய பாடல்பெற்ற கோவில்களிலும், பாடப் பெறாத பல கோவில்களிலும் திருப்பதிகம் ஓதப்பெற்றது. பிராமணர் முதலிய பல வகுப்பாரும் திருப்பதிகம் ஓதலில் ஈடுப்பட்டிருந்தனர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. திருஆமாத்துர்க் கோவிலில் குருடர் பதினாறு பேர் நாளும் மும்முறை திருப்பதிகம் ஓதிவந்தனர். திருவொற்றியூர்க் கோவிலில் திருப்பதிகம் ஓதப் பதினாறு தேவரடியார் இருந்தனர். தில்லையில் மாசி மாதத் திருவிழாவில் திருத்தொண்டத் தொகை பாடப் பெற்றது. இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் "தேவார நாயகம்"என்றோர் அரசியல் உத்தியோகஸ்தன் இருந்தான். அவன் சோழ நாட்டுத் தேவாரப் பள்ளிகளையோ அல்லது கோவில்களில் தேவாரம் ஓதுவார்களையோ கவனிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் போலும்!

ஆடல் – பாடல்: தஞ்சைப் பெரிய கோவிலில் இசைக் கலையையும் நடனக் கலையையும் வளர்க்க 400 பதியிலார் இருந்தனர். அவர் அனைவரும் தமிழ்நாட்டுப் பல கோவில்களிலிருந்து வரவழைக்கப்பட்டனர் என்று இராசராசன் கல்வெட்டு கூறுகிறது. இதனால் தமிழ் நாட்டுக் கோவில்கள் பெரும்பாலானவற்றுள் இசை-நடனக் கலைகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று வந்தன என்பது வெள்ளிடை மலைபோல விளக்கமாகிறதன்றோ?

கோவில்களில் படிக்கப்பெற்ற நூல்கள்: பல்லவர் காலத்தில் பாரதம் சில கோவில்களிற் படித்து மக்கட்கு விளக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அங்ஙனமே சோழர் காலத்தில் பாரதம், இராமாயணம், பிரபாகரம், சிவ தருமம், இராசராச விசயம் என்பன கோவில்களில் படித்து விளக்கப் பெற்றன. நீடுர்க் கோவிலில் "புராண நூல் விரிக்கும் புரசை மாளிகை" என்று ஒரு மாளிகை இருந்ததை நோக்கக் கோவில்களில் புராண நூல்களும் படித்து விளக்கப்பட்டன என்பதை அறியலாம்.

நரலோகவீரன் செய்த திருப்பணிகள்: நரலோக வீரன் என்பவன் முதல் குலோத்துங்கன் தானைத் தலைவருள் ஒருவன் தொண்டைநாட்டு மணவிற் கோட்டத்து அரும்பாக்கம் என்ற ஊரினன். இவன் சிறந்த சிவபக்தன். இவன் பல கோவில்களுக்குப் பலவகை அறங்கள் செய்துள்ளான். அவற்றுள் சிதம்பரம் கோவிலுக்கும் திருவதிகைக் கோவிலுக்கும் இவன் செய்த திருப்பணிகள் குறிக்கத்தக்கவை. இவன் சிதம்பரத்திற் செய்த பல திருப்பணிகளில் சிறந்தவை- (1) தில்லைவாழ் அந்தணர்க்கு ஏராளமாகப் பொருள் உதவிசெய்தமை, (2) சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தமை, (3) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுது வித்தமை என்பன. இப்பெருமகன் (1) திருவதிகை வீரட்டானத்தில் திருநாவுக்கரசர்க்குத் தனிக்கோவில் கட்டினான். (2) திருநாவுக்கரசர் திருமடத்திற்கு 48 ஆயிரம் குழி நிலத்தைத் தானம் செய்தான்.

திருக்கைக்கோட்டி: இது கோவிலில் உள்ள ஒரு மண்டபம். இதனில் தேவார ஏடுகள் படிக்கப்படும்; எழுதப்படும்; புதுப்பிக்கப்படும்;திருமுறைகள் பூசிக்கப் பெறும். இப் பணிகளைச் செய்து வந்தவர் தமிழ் விரகர் என்பவர். இவர்க்கு மானியம் உண்டு. இத்தகைய மண்டபங்கள் தில்லை, சீகாழி முதலிய இடத்துக் கோவில்களில் இருந்தன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இக்கல்வெட்டுச் செய்திகளைக் காண்கையில், சேக்கிழார்க்கு முன்பே தேவாரப் பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டுவிட்டன; திருக்கோவில்களில் தேவார ஏடுகள் வைத்துப் பூசித்துப் பாதுகாக்கப் பெற்றன என்பன வெளியாகின்றன அல்லவா?

சிவனடியார் சிற்பங்கள்: சோழர்கள் கற்றளிகளாக மாற்றிய பாடல்பெற்ற கோவில்கள் சிலவற்றிலும் நாயன்மார் வரலாற்றுச் சிற்பங்கள் காண்கின்றன. அவற்றுள் குறிக்கத் தக்கவை: (1) சிதம்பரத்திற்கு அடுத்த மேலக் கடம்பூர்க் கோவிற் சிற்பங்கள்; (2) கீழ்க் கடம்பூர்ச் சிற்பங்கள். (3) கங்கைகொண்ட சோழீச் சரத்துச் சிற்பங்கள் ஆகும்.

1. மேலக் கடம்பூர்க் கோவில் பல்லவர் காலத்தது. அதன் கருவறையின் புறச்சுவர்கள் மூன்றில் இரண்டு வரிசைகளில் நாயன்மார் அறுபத்து மூவர் வரலாற்று நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், காரைக்கால் அம்மையார் தலைகீழே நடந்து செல்வதுபோன்ற காட்சி ஒன்று. நாயன்மார் சிறப்பு நிகழ்ச்சிகளைக் குறிக்கும் இச்சிற்பங்கள் பல்லவர் காலத்தனவாகலாம். அல்லது இராசராசன் காலத்தன (திருத்தொண்டர் திருவந்ததாதி உண்டான காலத்தன) வாகவோ, சிறிது பிற்பட்டனவாகவோ இருக்கலாம். உண்மை எதுவாயினும்,இவை சேக்கிழார்க்கு முற்பட்டவை என்பதில் ஐயமில்லை.

2. கீழ்க் கடம்பூர்க் கோவில் இன்று இடிந்து சிதைந்து கிடக்கிறது. அதன் கருவறைப் புறச்சுவர்கள் மூன்று மட்டும் நின்றவண்ணம் இருக்கின்றன. அவற்றில் பெரியனவும் சிறியனவுமான புரைகள் காண்கின்றன. பெரிய புரைகளில் சிவனுடைய பலவகை உருவச் சிலைகளும் சிறிய புரைகளில் நாயன்மார் உருவச் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. புரைகட்கு அடியில் அம்மூர்த்தங்களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்று தெளிவாகக் காணத்தக்க நிலையில் இருக்கும் நாயன்மார் பெயர்கள்-உலகாண்ட மூர்த்தி [2] (மூர்த்தி நாயனார்), முருகாண்டார் (முருக நாயனார்). திருக்குறிப்புத் தொண்டர், தண்டிப்பெருமாள் என்பன. இக்கல்வெட்டு எழுத்துகள் முதல் இராசராசன் காலத்தனவாகக் காண்கின்றமையால்,இந்நாயன்மார் உருவச் சிலைகளும் ஏறத்தாழ இராசராசன் காலத்தன என்று கொள்ளலாம்.
-------
[2] "மும்மையால் உலகாண்ட மூர்த்தி" என்பது திருத்தொண்டத்தொகை.

3. கங்கைகொண்ட சோழபுரம். அதன்கண் உள்ள வியத்தகு பெரிய கோவிலும் இராசேந்திரன் காலத்தன என்பது முன்பே குறிக்கப்பட்ட செய்தியாகும். அப்பெரிய கோவிலில் நடுமண்டபத்திற்குச் செல்லும் வடக்கு வாயிற்படி ஓரம் காணப்படும் சண்டீசர் உருவம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தக்கது. சிவபெருமான் உமையம்மையுடன் இருந்து சண்டீசர் முடியில் தம் கொன்றை மாலை சூட்டி, அவருக்குச் சண்டீசப்பதம் தருகின்ற காட்சியை விளக்கும் அச்சிற்பம் கண்டு களிக்கத்தக்கது. அதனைப் படத்திற் கண்டு மகிழ்க. இஃதன்றி, நடு மண்டபச்சுவரில் நான்கு வரிசைகளிற் சண்டீசர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பங்களும் அக்கோவிலில் உள்ள ஏனைய சிற்பங்களும் ஒரே காலத்தனவாகக் காண்கின்றன. எல்லாச் சிற்பங்களும் கோவில் கட்டப்பெற்ற காலத்திலேயே செய்யப்பட்டனவாகவே காண்கின்றன. ஆகவே, இச்சிற்பங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் . முற்பட்டவை என்னலாம்.

சிவனடியார் சித்திரங்கள்: இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச்சுவர் ஒன்றில் காணப்படும் ஓவியங்கள் கவனிக்கத் தக்கவை. அவை சுந்தரர் வரலாற்றை விளக்குவன.
1. ஒரு சித்திரம் சிவபெருமான் கயிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அவர் மான்தோல் மீது யோக நிலையில் இருக்கிறார். அவரைச் சூழ அடியவரும் கணங்களும் காண்கின்றனர்.
2. சிவபிரான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட வரலாற்றை விளக்கும் சித்திரம் அழகானது. மணத்திற்கு வந்த மறையவர் ஒரு மண்டபத்தில் கூடியுள்ளனர். அவர்கட்கு இடையில் இருவர் எதிர் எதிராக நிற்கின்றனர். ஒருவர் கிழவர் மற்றொருவர் குமரர். கிழவருடைய ஒரு கையில் தாளங்குடை இருக்கிறது; மற்றொரு கையில் பனையோலை காணப்படுகிறது. இளைஞர் அடக்கமாக நிற்கின்றார். கூட்டத்தினர் முகத்தில் திகைப்பும் வியப்பும் மாறி மாறிக் காண்கின்றன. அவர்கட்கு வலப்புறம் ஒரு கோவில் காண்கிறது. கூட்டத்தினர் அதற்குள் விரைவாக நுழைகின்றனர்.
3. அடுத்த ஒவியம் சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைக் காட்டுவதாகும். வெள்ளையானை நான்கு கோடுகளுடன் தெரிகிறது. அதன் கோடுகளிர் பூண்கள் இடப்பட்டுள்ளன. அந்த யானைமீது இளைஞர் ஒருவர் இவர்ந்து செல்கிறார். அந்த இளைஞர் தாடியுடையவராகக் காண்கிறார். அவர் கைகளில் தாளம் இருக்கிறது. அது விரைந்து செல்வதாகத் தெரிகிறது. அதன்மீது கட்டமைந்த உடல்வளம் கொண்ட ஒருவர் அமர்ந்து அதனைச் செலுத்துகிறார். யானையும் குதிரையும் ஒரே திசை நோக்கிச் செல்கின்றன. யானைமீது செல்பவர் சுந்தரர். குதிரை மீது செல்பவர் சேரமான் பெருமாள் நாயனார்.
4. இவ்விரண்டு பக்த சிரோமணிகட்கு மேற்புறமாகக் கந்தர்வர் பலர் காண்கின்றனர். அவர்களுள் சிலர் சுந்தரர் மீதும் சேரமான்மீதும் மலர்மாரி பெய்கின்றனர். வேறு சிலர் பலவகை இசைக் கருவிகளை இசைக்கின்றனர்.

தஞ்சாவூர், இராசராசன் காலம்வரை சோழப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. அவனுக்குப் பின் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இறுதிவரை விளங்கினது. அதனால், இராசராசனுக்குப் பிறகு தஞ்சாவூர் சிறப்பிழந்து விட்டதென்னல் தவறாகாது. இராசராசன் பெரிய கோவிலைக் கட்டினவன். அக்கோவிலில் அப்பர், சம்பந்தர்,சுந்தரர் உருவச்சிலைகள் அவன் காலத்திற்றான் எடுப்பிக்கப் பெற்றுச் சிறப்படைந்தன. அப்பேரரசன் காலத்திற்றான் திருமுறைகள் வகுக்கப்பட்டன; மூவர் சிறப்பு மிகுதியாகத் தமிழ்நாடு அறிய வாய்ப்பு உண்டானது. இவை அனைத்தையும் நோக்க, மேற்சொன்ன ஒவியங்களும் இராசராசன் காலத்தனவாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளலே பொருத்தமுடையது. இம்முடிவு பொருத்தமாயின்,இச்சித்திரங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் முற்பட்டன என்று கூறலாம்.

மக்கள் வழங்கிய நாயன்மார் பெயர்கள்: பல்லவர் காலத்திலேயே மக்கள் நாயன்மார் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்ட தன்றோ? அப்பெயர்களைச் சோழர் கால மக்கள் மிகுதியாக இட்டு வழங்கினர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவை அனைத்தையும் கூற இடமில்லை. ஆதலின், இன்றியமையாத சில பெயர்களை மட்டும் இங்குக் கூறுவோம்: (அட்டவணையில் காண்க).

மக்கள் பெயர்

நாயன்மார் பெயர்

1. மூர்க்கன் ஐயாறன்

முர்க்க நாயனார்

2. நங்கை வரகுணப் பெருமானார்,நக்கன் பரவையார்

நங்கை பரவையார்

3. திருவெண்காட்டு நங்கை

வெண்காட்டு நங்கை

4. நீல கங்கன், புலியூர் நக்கன்

நீல நக்கன்

5. பூதி மாதேவடிகள்

அப்பூதியடிகள்

6. புகழ்த்துணை அடிகள்

புகழ்த்துணை நாயனார்

7. ஏனாதி கிழான்

ஏனாதிநாத நாயனார்

8. காரி வேளார்

காரி நாயனார்

9. இராச நாராயண முனையதரையன்

நரசிங்க முனையரையர்

10. அமரபுயங்கனான கோட்புலி

கோட்புலி நாயனார்

11. ஐ(யாற்று) அடிகள்

ஐயடிகள் காடவர்கோன்

12. கலிச் சிங்கன்

கழற் சிங்கன்

13. காமன் தாயன்

அரிவாள் தாயன்

14. நாவலூர் உடையான் ஆரூரன். நம்பி ஆருரன்,
உடைய நம்பி. தம்பிரான் தோழன் ஆலால சுந்தரன்

இவை அனைத்தும் சுந்தரர் பெயர்கள்

15. குமர நந்தி

நமி நந்தி அடிகள்

16. அதிகாரி திருநீலகண்டன்

திருநீலகண்ட நாயனார்

17. இளையான்குடி கிழவன்

இளையான்குடி மாறன்

18. கலியான் மன்றாடி

கலிய நாயனார்

19. திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர்

20. கலயன் மாணிக்கம்

குங்கிலியக் கலயன்


இங்ஙனம் நாயன்மார் வரலாறுகள் - சிற்பம், ஓவியம், மக்கட் பெயர்கள், விழாக்கள், திருமுறை ஒதல் இவற்றின் வாயிலாகச் சோழர் காலத் தமிழகம் முழுவதும் சேக்கிழார்க்கு முன்னரே பேரளவு பரவியிருந்தன என்பதைச் சோழர் காலக் கல்வெட்டுகள் வாயிலாக நன்கறியலாம். இனி, நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை நல்கிய சோழர் கால இலக்கிய நூல்களைக் காண்போம்.
-------------

சோழர் கால இலக்கியம்

சென்ற பகுதியிற் பல்லவர் கால இலக்கியமாகிய தேவாரத் திருமுறைகளைப்பற்றி ஆராயப்பட்டது. அவை நாயன்மார் வரலாறுகள் அறியப் பேருதவியாக இருப்பவை என்பது விளக்கப்பட்டது. அவை போலவே சோழர் காலத் திருமுறைகளாக விளங்குபவை - நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டனவாகக் கருதப்படும் 8,9,10, 11-ஆம் திருமுறைகள் - முதல் இடம் பெறத்தக்கவை.

எட்டாந் திருமுறையாகிய திருவாசகம் கண்ணப்பர், சண்டீசர் இவ்விருவரது பக்திச் சிறப்பையே விதந்து பேசுகிறது. ஒன்பதாந் திருமுறையில் சண்டீசர், கண்ணப்பர், கணம்புல்லர், அப்பர், சம்பந்தர். தில்லைவாழ் அந்தணர் இவர்தம் சிறப்புகள் குறிக்கப்பட்டுள. பத்தாந்திருமுறையில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆயினும், கோவில் அமைப்பு முதலிய பக்தி மார்க்கத்தின் இயல்கள் அனைத்தும் மூவாயிரம் பாக்களில் விளக்கப்பட்டுள்ளன. பதினோராந் திருமுறையில் (1) காரைக்கால் அம்மையார் பாடிய பாக்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் சில கிடைக்கின்றன. (2) இன்று 24 வெண்பாக்களுடன் சிதைந்த நூலாகவுள்ள ஐயடிகள் காடவர்கோன் பாடிய க்ஷேத்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழு நூலாக இருந்திருக்கலாம். அதிலிருந்து அந்நாயனார் வரலாறு, கோவில்களின் சிறப்பியல்புகள் முதலியன சேக்கிழார் அறிய வசதி இருந்தது என்னலாம். (3) சேரமான் பாடிய பொன்வண்ணத்து அந்தாதியின் ஈற்று வெண்பாவில் (i) சுந்தரர் வெள்ளானை மீது கயிலை சென்றமை, (ii) சேரமான் குதிரைமீது கயிலை சென்றமை, (iii) சேரமான் கயிலையில் ஆதியுலாவை அரங்கேற்றினமை, தில்லையில் பொன் வண்ணத்து அந்தாதியைப் பாடினமை என்ற குறிப்புகள் காண்கின்றன. (4) நக்கீரர் பாடிய பாக்களில் சண்டீசர், சாக்கியர், கோச்செங்கணான், கண்ணப்பர் வரலாறு விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (5) கல்லாடர் பாட்டில் கண்ணப்பர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. (6) பட்டினத்தடிகள் பாக்களில் சண்டீசர், சிறுத்தொண்டர், சம்பந்தர்,சாக்கியர், சுந்தரர் இவர்தம் பக்திச் சிறப்பு பாராட்டப்பட்டுள்ளது. (7) இவை யாவற்றினும் மேலாகத் திருமுறைகள் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களே சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தன என்று துணிந்து கூறலாம். நம்பி, சம்பந்தரைப்பற்றி ஆறு நூல்கள் பாடியுள்ளார். அவற்றிற் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாகக் குறித்திருக்கிறார். அப்பரைப் பற்றி ஒரு நூல் பாடியுள்ளார். அதனில், அப்பரைப் பற்றிப் பல செய்திகளை விளக்கியுள்ளார். இவர் நாயன்மார் அறுபத்துமூவர் மீதும் பாடிய "திருத்தொண்டர் திருவந்தாதி"யே மிகவும் இன்றியமையாதது. அது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக்கொண்டு ஒரளவு விளக்கமாகப் பாடப்பட்டது. அதனில் சுந்தரர் வரலாறு 18 பாக்களிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின், இது பெரிய புராணத்திற்குப் பேருதவி புரிந்த மூல நூல்களில் முதல் இடம் பெற்றது என்னலாம்.

கல்வெட்டுகளிற் கண்ட நூல்கள்
சேக்கிழார்க்குக் காலத்தால் முற்பட்ட சோழர் காலத்து நூல்கள் சில,சமயத் தொண்டிற்காகச் செய்யப்பட்டன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுட் சிறந்தவை - (1) இராசராச விசயம், (2) இராச இராசேச்வர நாடகம், (3) கன்னிவன புரணம், பூம்புலியூர் நாடகம் என்பன.

1. இராசராச விசயம்: இந்நூல் திருப்பூந்துருத்திக் கோவிலிற் படித்துக் குடிமக்களுக்கு விளக்கப்பட்டது. இதனில், இராசராசன் பெற்ற வெற்றிகள் சமயத் திருப்பணிகள் என்பன குறிக்கப்பட்டிருக்கலாம். சமயப் பணிகளில், அவன் நம்பியைக் கொண்டு திருமுறைகள் வகுத்தமையும் அவன் பெரிய கோவிலில் எடுப்பித்த நாயன்மார் உருவச்சிலைகள் பற்றிய குறிப்புகளும் தக்க அளவு இடம் பெற்றிருக்கலாம்.
2. இராசராசேச்வர நாடகம்: இந் நூலில் தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட விவரம், அதனில் நாயன்மார் உருவச் சிலைகள். எடுக்கப்பட்ட விவரம் முதலியன இடம்பெற்றிருக்கும் என்பது அறிஞர் கருத்து. அஃது உண்மையாயின், அந்நூலிற் கண்ட நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள் சேக்கிழார்க்கு ஓரளவு பயன்பட்டன. என்னலாம்.
3. கன்னிவனம் என்பது திருப்பாதிரிப்புலியூர் ஆகும். அதுபற்றிய புராணம், நாடகம் என்ற இரண்டும் அவ்வூரினரான புலவர் ஒருவராற் செய்யப்பட்டவை. இவை முதற் குலோத்துங்கன் காலத்தில் இயன்றவை. திருப்பாதிரிப்புலியூரைப் பற்றிய வரலாறு யாதாக இருத்தல் கூடும்? நாம் அறிந்த அளவில், அவ்வூரில் புகழ்பெற்ற சமணப் பள்ளியும் பாழிகளும் இருந்தன: பெயர்பெற்ற சமண முனிவர் பலர் அங்கு இருந்து சமய நூல்கள் பலவற்றைச் செய்தனர்,மொழிபெயர்த்தனர். சமண மடத்திற்குப் பல்லவ வேந்தர் ஆதரவு காட்டினர். அங்குத்தான் அப்பர் சமணராகித் தருமசேனர் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகள் சமணத் தொண்டு செய்து வந்தார். பிறகு அவர்க்குச் சூலைநோய் காணச் சமணரோடு மாறுபட்டுத் திருவதிகை சென்று சைவரானார் சமண அரசனான பல்லவனால் பல இடர்பாடுகளை அடைந்தார்; முடிவில், கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரம் கரையேறினார்; கரையேறி, அவ்வூர்ச் சிவன் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்.

அரசன் அப்பரது திருத்தொண்டின் உறைப்பை உள்ளபடி அறிந்து சைவன் ஆனான். பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கட்டடங்களை இடித்தான்; அச்சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் தன் பெயரால் "குணபர ஈச்வரம்" என்ற கோவிலைக் கட்டினான்.

இவ்வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் திருப்பாதிரிப்புலியூரை நடுநாயகமாகக் கொண்டு நிகழ்ந்தவை. ஆதலின், இவை கன்னிவன புராணத்துள் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு விரிவாகக் கூறப்பட்டிருக்கலாம். . இங்ஙனமே பூம்புலியூர் நாடகத்துள்ளும் இவை பல காட்சிகளாக விளக்கம் பெற்றிருக்கலாம் என்று நினைத்தல் தவறாகாது.

4. புராண நூல்கள்: கோவில்களில் புராணங்கள் படித்துக் குடிகட்கு விளக்கிக் கூறும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்தது. "புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை" ஒன்று நீடூர்க் கோவிலில் இருந்தது என்பதை நோக்க, இவ்வுண்மை நன்கு புலனாகும். இதனால், இந்நாட்டில் சேக்கிழார்க்கு முன்பே, சைவ சமய சம்பந்தமான புராணங்கள் சிலவேனும் இருந்திருத்தல் வேண்டும்; அவை சிவன் கோவில்களிற் படித்து விளக்கப்பட்டனவாதல் வேண்டும் என்ற செய்தி தெளிவுறத் தெரிகிறதன்றோ?

தில்லை உலா: இது சேக்கிழார்க்கு முற்பட்டதாகக் கருதத் தக்கது. இது முழுவதும் கிடைக்கவில்லை. கிடைத்த அளவு "தமிழ்ப் பொழில்" மாத வெளியீட்டில் வந்தது. இதனை வெளியிட பெரியார் பண்டிதர் – உலகநாத பிள்ளை ஆவர். இதனில் "திருநீற்றுச் சோழன்" எனப்பட்ட முதற். குலோத்துங்கன் படிமம் நடராசப் பெருமானது உலாவிற் கலந்து கொண்டது என்பதால், அவனுக்குப் பின் செய்யப்பட்ட நூல் என்று திட்டமாகக் கூறலாம். ஆயின், தில்லையில் விக்கிரம சோழனோ,இரண்டாம் குலோத்துங்கனோ செய்த திருப்பணிகள் சிறப்பிடம் பெறாமையாலும், சைவ உலகம் போற்றும் பெரிய புராணம் தில்லையிற் செய்யப்பட்டதைக் கூறாமையானும் - இந்நூல் சேக்கிழார்க்கு முற்பட்ட தெனத் திண்ணமாகக் கூறலாம்.

இதனிற் கூறப்பெற்ற செய்திகள்: கூத்தப் பெருமான் உலாப்போகையில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், மாணிக்கவாசகர், வரகுண பாண்டியன், சண்டீசர் இவர்தம் உருவச்சிலைகளைக் கொண்ட தேர்கள் உடன் சென்றன. இவர்கட்குமுன், திருமுறை ஏடுகள் கொண்டு செல்லப்பட்டன. இந்நூலில் (1) சிவன், சுந்தரர்க்கும் பரவையார்க்கும் இடையே தூது சென்றமை, (2) கோட்புலி நாயனார் பிள்ளையை வாளால் துணித்தமை, (3) சிறுத்தொண்டர் பிள்ளையைக் கொன்று விருந்திட்ட முழு விவரம், (4) சம்பந்தர் சைவத்தைப் பரப்பப் பாண்டிய நாடு சென்றமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் மூன்று விவரங்களும் இன்று கிடைத்துள்ள வேறு நூல்களிற் கூறப்படாதவை. எனவே, இவை பெரிய புராணத்திலும் காணப்படுகின்றன எனின், சேக்கிழார் இவ்வுலா நூலையும் இதுபோன்ற தம் காலத்து வேறு நூல்களையும் பார்த்திருத்தல் வேண்டும் என்று கொள்ளுதல் பொருத்தமே அன்றோ?

சோழர் காலத்திற் சமண சமய நிலை: சமண சமயக் கொள்கைகளை நன்கு விளக்கிக் கூறும் நூல்களான நீலகேசி, சிந்தாமணி என்ற இரண்டில் முன்னது சோழர்க்கு முற்பட்டது. பின்னது சோழர் காலத்தது. சம்பந்தர் மதுரையில் இருந்த சமணருடன் வாதிட்ட விவரத்தைச் சேக்கிழார் தமது நூலில் விரிவாகக் கூறியிருத்தலையும், பிற புராணங்களில் ஆங்காங்குச் சமணர் பழக்க வழக்கங்களைச் சுட்டியிருத்தலையும் நோக்க, அவர் தம் காலம் வரை நாட்டில் இருந்த சமண நூல்களைச் செவ்வையாகப் படித்தவர் என்பதை எளிதில் உணரலாம். இதனுடன், அவர் தம் காலச் சமணப் பெரு மக்களுடன் அளவளாவி, அவர்களுடைய கொள்கைகளையும் பிறவற்றையும் நன்கு விசாரித்தறிந்தவராகவும் இருத்தல் கூடும் என்று நம்ப இடமுண்டு. சேக்கிழார் காலத்துச் சோழப் பெரு நாட்டில் சமணர் இருந்தனரா? எனின், ஆம் இருந்தனர். சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. சமண சமய நூல்கள் இருந்தன. அவை சமணர் கோவில்களில் படித்து விளக்கப்பட்டன. வெடால் [3], சிற்றாமூர்[4], ஆனந்த மங்கலம் [5], விளாப்பாக்கம் [6], திருப்பருத்திக்குன்றம் [7] முதலிய இடங்களில் சமணர் கோவில்களும் மடங்களும் இருந்தன. அவற்றில் "குரத்திமார்"என்றும், அடிகள் என்றும் கூறப்பெற்ற சமணப் பெண் துறவிகள் பலராக இருந்து சமயத் தொண்டு செய்து வந்தனர். சமணத் துறவிகள் "ரிஷி சமுதாயம்" என்ற பெயரால் விளங்கினர். எனவே, சேக்கிழாரது சமண சமயப் புலமை, சமண நூல்களாலும் சமணப் பெருமக்களாலும் உண்டாகி இருத்தல் வேண்டும் எனக் கூறல் தவறாகாது.
-------
[3] வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது
[4] தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது.
[5] செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
[6] செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
[7] செங்கற்பட்டு மாவட்டத்தில் உன்ளது.

பெளத்த சமய நிலை: மணிமேகலை, வளையாபதி என்ற இரு நூல்களும் சேக்கிழார்க்கு முற்பட்ட பெளத்த நூல்கள். அவற்றில் பெளத்த சமயக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள. சேக்கிழார் காலத்தில் நாகப்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாகவும் பெளத்த சமயத்தவரான சீன வணிகர் குடியேறியிருக்கத் தக்கதாகவும் விளங்கியது. சேக்கிழார் சோழப் பேரரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் கடல் வாணிகத்திற் கவின்பெற்று விளங்கிய நாகப்பட்டினம் சென்றிருத்தல் இயல்பே அங்கிருந்த பெளத்த வாணிகருடன் அளவளாவி அவர்தம் சமய நுட்பங்களை நேரிற் கேட்டறிந்திருந்தலும் இயல்பே.

முடிவுரை: இதுவரை கூறப்பெற்ற பலவகை விவரங்களால்,சேக்கிழார்:பெரிய புராணம் பாடுவதற்கு முன்பே இந்நாட்டில நாயன்மாரைப்பற்றிய வரலாறுகள் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் ஒரளவு பரவி இருந்தன என்பதும் அங்ஙனம் அவை பரவக் காரணமாக இருந்தவை கோவில்கள், சிற்பங்கள், ஒவியங்கள், விழாக்கள்,மடங்கள், புராணங்கள் முதலான சமய நூல்கள், சைவத் திருமுறைகள்,பிறசமய நூல்கள் என்பதும் இவை அனைத்தையும் பயன்படுத்தியே சேக்கிழார் ஒப்புயர்வற்ற பெரிய புராணத்தைப் பாடியிருத்தல் வேண்டும் என்பதும் அறியக்கிடத்தல் காணலாம். இனி அடுத்த பிரிவில்,நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கச் சேக்கிழார் மேற்கொண்ட பெரு முயற்சியைக் கண்டறிவோம்.