சேக்கிழார் பெரும் புலமை

பெரியபுராணம் - சுந்தரர் புராணம்: நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறுகள் பெரும்பாலும் தனித்தனியானவை ஒன்றேடொன்று தொடர்புடையன அல்ல. ஆயின், அப்பர் சம்பந்தர் சமகாலத்தவர் பதினொருவர் சந்தரர் சமகாலத்தவர் பதின்மூவர். ஏனையோர் அனைவரும் தனித்தனிக் காலத்தவர் என்று கொள்ளலாம். தம்மை ஒழிந்த 62 நாயன்மார் பெயர்களையும் சிலருடைய சிறப்பியல்புகளையும் தொகுத்துப் பாடித் திருத்தொண்டர் பெயர்ப் பட்டியலைத் தயாரித்துத் தந்தவர் சுந்தரர். சுந்தரர் வரலாறே முக்கியமானது.
(1) அவரது வரலாற்று நிகழ்ச்சிகளில், ஒன்று அவர் பரவையாரை மணந்தமை. அவர் அவ்வம்மையாரை மணந்த பிறகு அக்கோலத்துடன் திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் கோவிலுக்கு அரச மரியாதையுடன் ஊர்வலமாகச் சென்றார். தேவாசிரிய மண்டபத்திற் குழுமி இருந்த நாயன்மார்களைக் கண்டார். அவர்களைப் பாட விழைந்தார். இறைவன் ஆணையும் பிறந்தது. சுந்தரர், "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்." என்று தொடங்கித் தனியடியார் அறுபத்து, மூவரையும் தொகை அடியார் ஒன்பதின்மரையும் பாராட்டித் திருதொண்டத் தொகை பாடினார். இது சுந்தரர் வாழ்க்கையிற் சிறப்புடைய நிகழ்ச்சியாகும்.
(2) பிறகு சுந்தரர் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவொற்றியூரை அடைந்தார் சங்கிலியாரை மணந்தார். கண் இழந்து தல யாத்திரை செய்து கண் பெற்றார் திருவாரூரை அடைந்து பரவையாரைச் சமாதானப்படுத்தி வாழ்ந்தார் ஏயர்கோன் கலிக்காமனார் தம்மிடம் கொண்டிருந்த வெறுப்டை விருப்பாக மாற்றினார்.
(3) சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் நட்பைப் பெறத் திருவாரூரை அடைந்தார். அவருடன் பல தலங்களைத் தரிசித்தார். சுந்தரர் அவருடன் கூடிச் சேரநாட்டை அடைந்தார்; அங்குள்ள சிவத் தலங்களைத் தரிசித்து. மீண்டார்.
(4) இறுதியிற் சுந்தரர் சேரநாடு அடைந்து திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானை மீது புறப்பட்டுக் கயிலை சென்றார் சேரமான் குதிரை மீது அவரைப் பின் தொடர்ந்தார். சுந்தரர் வாழ்க்கைப் பிரிவுகளாகிய இந்த நான்காம் நூலின் முதலில் (1) தடுத்தாட் கொண்ட புராணம் என்ற பகுதியிலும், நூலின் இடையில் (2) ஏயர்கோன் கலிக்காம் நாயனார் புராணம் என்ற தலைப்பிலும், (3) சேரமான் பெருமாள் புராணம் என்ற வரலாற்றிலும், நூலின் இறுதியில் (4) வெள்ளானைச் சருக்கம் என்ற தலைப்பிலும் முறையே கூறப்பட்டுள்ளன. சேக்கிழார். சுந்தரர் புராணத்தை இங்ஙனம் நூலின் முதல், இடை, கடை என்னும் மூன்று பகுதிகளிலும், அவராற் பாராட்டப் பெற்ற நாயன்மார் வரலாறுகளை இந்நான்கு பகுதிகட்கும் இடையிடையே வைத்தும் பாடியிருத்தல். சுந்தரர் புராணமே - திருத்தொண்டர் புராணம் என்ற கொள்கையை வற்புறுத்துவதாகும்.
பெரியபுராணத்திற்குத் "திருத்தொண்டர் புராணம்" என்பது சேக்கிழார் இட்ட பெயர் ஆகும். திருத்தொண்டர் புராணம், சுந்தரர் புராணம் ஆயின், "திருத்தொண்டர்" என்ற பெயர் சுந்தரர்க்கு உரியதாதல் வேண்டும். இங்ஙனம் சேக்கிழார் உரிமையாக்கினரா? ஆம். அவர், தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரரை. "சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி"என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். எனவே, திருத்தொண்டர் புராணம் சுந்தரர் - புராணமே என்பது இதனாலும் அறியப்படும்.
பெரிய புராணம் பெருங்காவியமா? பெருங்காவியத்திற்குச் சிறப்பு இலக்கணங்கள் சில உண்டு.
1. நூல் முழுவதும் சிறப்புடைத் தலைவன் ஒருவனைப் பற்றியே பேசப்படல் வேண்டும்.
2. பெருங்காவியம் சருக்கம், படலம், இலம்பகம் என்ற பிரிவுகளில் ஒன்றைப் பெற்றதாக விளக்குதல் வேண்டும்.
3. அஃது அறம், பொருள். இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளை உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்.
4. மலை, கடல், நாடு, நகர், பருவகாலங்கள் (பெரும் பொழுதுகள்) சிறு பொழுதுகள் ஆகியவை பேசப் பெற்றனவாக இருத்தல் வேண்டும்.
5. பலவகை விளையாட்டுகள் பிள்ளை வளர்ச்சி முதலியன கூறப்பட்டிருத்தல் வேண்டும்.
இவை அனைத்தும் பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ளனவா?
1. பெரிய புராணம் முழுவதும் சுந்தரர் வரலாறே பேசப்பட்டுள்ளது என்பது மேலே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதன்றோ?
2. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை பதினொரு செய்யுட்களைக் கொண்டது. சேக்கிழார் அந்தப் பதினொரு செய்யுட்களையும் பதினொரு சருக்கங்களாக அமைத்துக் கொண்டார். ஒவ்வொரு செய்யுளின் தொடக்கத் தொடரையே சருக்கத்தின் பெயராக அமைத்துக் கொண்டார். அச்சருக்கங்களாவன:
செய்யுள் முதல் வரி |
சருக்கத்தின் பெயர் |
1. தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் |
தில்லை வாழ் அந்தணர் சருக்கம் |
2. இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்-கடியேன் |
இலைமலிந்த சருக்கம் |
3. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் |
மும்மையால் உலகாண்ட சருக்கம் |
4. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட |
திருநின்ற சருக்கம் |
5. வம்புறா வரிவண்டு மணம் நாற மலரும் |
வம்புறா வரிவண்டுச் சருக்கம் |
6. வார்கொண்டவன |
வார்கொண்ட வன சருக்கம் |
7. பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் |
பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் |
8. கறைக்கண்டன் கழலடியே |
கறைக்கண்டன் சருக்கம் |
9. கடல் சூழ்ந்த உலகெல்லாம் |
கடல் சூழ்ந்த சருக்கம் |
10. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் |
பத்தராய்ப் பணிவார் சருக்கம் |
11. மன்னியசிர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் |
மன்னியசிர்ச் சருக்கம் |
இந்த ஒவ்வொரு சருக்க முடிவிலும் புராணத் தலைவராகிய சுந்தரர் வரலாறு மறவாதிருத்தற்காக அவரைப் பற்றிய செய்யுள் ஒன்றைச் சேக்கிழார் பாடியிருத்தல் கூர்ந்து கவனிக்கத் தக்கது. இங்ஙனம் எல்லாச் சருக்கங்களும் சுந்தரர் வரலாற்றால் இணைப்புண்டு ஒரு தலைவனைப் பற்றியே பேசும் பெருங்காவியமாகப் பெரிய புராணம் திகழ்கின்றது. சேக்கிழார், இக்கருத்துக் கொண்டே சங்கிலி கோத்தாற் போலச் சுந்தரர் வரலாற்றை ஒவ்வொரு சருக்கத்துடனும் இணைத்திருத்தல் கண்டு வியக்கத்தக்க ஒன்றாகும்.
3. நாற்பொருள்: சுந்தரர் வரலாற்றிலும் அவராற் சுட்டப் பெற்ற நாயன்மார் வரலாறுகளிலும் சத்துப் பொருள்களாக விளங்குபவை அறம், பொருள், இன்பம், வீடேயாகும்.
4. மலை, கடல் முதலியன: மலைநாட்டு வளம் கண்ணப்பர் புராணத்துள் பண்படப் பேசப்பட்டுள்ளது. கடல் வளம் அதிபத்தர் புராணத்துள் கூறப்பட்டுள்ளது. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், சேரமான் பெருமாள் புராணம் முதலிய பல புராணங்களில் சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாட்டு வளங்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. நகரச்சிறப்பில் திருவாரூரும், திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் காஞ்சியும், பிற இடங்களிற் பிற நகரங்களும் (மதுரை முதலிய பழம்பதிகள்) பாராட்டப்பட்டுள்ளன. பெரும் பொழுதுகளான கார்காலம். குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக்காலம், இளவேனிற் காலம், முதுவேனிற்காலம் என்பன. அப்பர். சம்பந்தர், சுந்தரர் வரலாறுகளிற் குறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனமே காலை, நண்பகல், மாலை முதலிய சிறு பொழுதுகள் ஆறும் ஆங்காங்குப் பேசப்பட்டிருக்-கின்றன.
5. பலவகை விளையாட்டுகள்: பெண் மக்கள் விளையாடும் பந்தாட்டம்,அம்மானை, கழங்கு, ஊசல், சிற்றில் அமைத்து விளையாடல் போன்ற பலவகை விளையாட்டுகள், மானக்கஞ்சாறர் புராணத்தும் சம்பந்தர் புராணத்தும் காணலாம். ஆண் மக்கள் விளையாட்டுகள் கண்ணப்பர், திருநாளைப் போவார், சம்பந்தர் புராணங்களிற் கண்டு களிக்கலாம்.
பிள்ளை வளர்ச்சி. (1) ஆண்பால் வளர்ச்சியைச் சம்பந்தர். கண்ணப்பர் புராணங்களிற் காணலாம். (2) பெண் பால் வளர்ச்சியைச் சம்பந்தர், காரைக்கால் அம்மையார், மானக்கஞ்சாறர் புராணங்களிற் கண்டு இன்புறலாம். இவ்வளர்ச்சி முறைகளை "பிள்ளைத் தமிழ்" நூல்களிற் கூறப்படும் இலக்கண முறைக்கு ஒத்திருந்தல் படித்து இன்புறத்தக்கது.
இங்ஙனம் ஒரு பெருங்காவியத்திற்கு உரிய இலக்கணங்களை எல்லாம் தன் மாட்டுச் சிறக்கப்பெற்று விளங்குவது சேக்கிழார் பாடியருளிய பெரிய புராணம் ஆதலின். அப்பெருநூல் பெருங்காவியம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவே சேக்கிழார் கருத்துமாகும் என்பதற்கு அவரது பாயிரம் சான்றாதல் காணலாம். சேக்கிழார், "எடுக்கும் மாக்கதை" என்ற பெரிய புராணத்தைக் குறிக்கின்றார். இதனால் அஃது உதயணன் வரலாறு உரைக்கும் "பெருங்கதை" என்ற "கொங்கு வேள் மாக்கதை" போன்றதொரு காவியம் என்பது பொருளாகுமன்றோ?
சேக்கிழார் பல்கலைப் புலவர்: இங்ஙனம் பெரியதொரு காவியம் பாடிய சேக்கிழார் பெரும்புலவர் என்பதை அவரது பெருங்காவியம் நன்கு விளக்கி நிற்கின்றது. அவர் (1) தமிழ் நூல்களில் நிரம்பிய புலமை உடையவராக விளங்கினார். (2) சைவசமய நூல்களில் சிறந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்தார் நாகரிகக் கலைகள் எனப்படும் வானக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, உடல்நூற்கலை, உளநூற்கலை, மருத்துவக்கலை முதலியவற்றிற் சிறந்து விளங்கினார். இப்பலவகைக் கலைப் புலமையையும் விளக்க வகைக்கொரு சான்று இங்குக் காட்டுவோம்.
(1) தமிழ் நூற் புலமை
பெருங்காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைப் பாடிய ஆசிரியர் சேக்கிழார் பெருமான் தமக்குக் காலத்தால் முற்பட்ட புறநானூறு, அகநானூறு. நற்றினை, ஐங்குறுநூறு, கலித்தொகை,பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற பழைய இலக்கியங்களை அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது காவியத்தால் நன்கு புலனாகிறது. அப்பெரியார் மேற்சொன்ன நூற் கருத்துக்களை எங்ஙனம் தமது நூலுள் எடுத்து ஆண்டுள்ளனர் என்பதைக் கீழே காண்க.
புறநானூறு: சேக்கிழார் திருநகரச் சிறப்பில் "அரசன் தன் நாட்டு உயிர்கட்குக் கண்ணும் ஆவியும் போன்றவன் (செ. 14) என்றும் புகழ்ச்சோழர் புராணத்தில் "மன்னவன் தன் நாட்டு உயிர்கட்கு உயிர் (செ. 33) என்றும் கூறியிருத்தல்.
"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
என்ற புறநானூற்றுச் செய்யுள் (செ.186) அடிகளோடு ஒத்துவரல் காணலாம்.
அகநானூறு: கண்ணப்பர் புராணத்தில் இரும்புலி எயிற்றுத் தாலி (செ.9) என்றமை, "புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி" (செ. 7) என்னும் அகநானுற்று அடியுடன் ஒன்றுபடல் உணரலாம்.
நற்றிணை: கண்ணப்பருடன் வேட்டையாடச் சென்ற நாய்கள் தம் நாக்களை நீட்டியும் சுருக்கியும் தொங்கவிட்டுக் கொண்டு ஓடின. அக்காட்சி, வேடரது வில்மீது பொருந்தும் வெற்றி மகளது சிவந்த பாதம் முன்போய் நீள்வது போலக் காணப்பட்டது என்ற (செ. 69) கருத்து.
"முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய்
நன்னாப் புரையும் சீறடி"
என்ற நற்றிணைச் செய்யுள் (252) அடிகளிற் பார்க்கலாம்.
ஐங்குறுநூறு: திருநீலகண்ட நாயனார் பரத்தை வீட்டிலிருந்து மீண்டதை உணர்ந்த அவர் மனைவியார், அவரோடு உடனுறைதலை விரும்பாராய்த் தம்மைத் தீண்டலாகாது என்று ஆணையிட்டனர். இக்கருத்து,
"என்னலம் தொலைவதாயினும்
துன்னேம் பெரும, பிறர்த்தோய்ந்த மார்பே."
என்ற ஐங்குறுநூற்றுப் பாவடிகளின் பொருளோடு ஒத்துவருதல் காணத்தக்கது.
கலித்தொகை: மானக்கஞ்சாற் நாயனார் புராணத்தில் (செ.11) கூறப்பட்டுள்ள,
"மழைக்குதவும் பெருங்கற்பயின் மனைக்கிழத்தி",
என்ற தொடரின் கருத்தும்
"வான்தரு கற்பினாள்."
"அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே"
என்று வரும் கலித்தொகைச் செய்யுட்களில் (16,39) வந்துள்ள கருத்தும் ஒன்றுபடல் ஓர்க,
திருக்குறள்: சேக்கிழார் உலகப் புகழ்பெற்ற திருக்குறட் பாக்களை அழுத்தந்-திருத்தமாகப் படித்து உணர்ந்தவர் என்பதற்கு ஐம்பதுக்கு மேற்பட்ட சான்றுகள் காட்டலாம். அப்பரை நேரிற் கண்டு பழகாதிருந்தும் அப்பூதியடிகள் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரையே நினைத்திருந்தார். அவரது திருப்பெயரையே தம் வீட்டில் இருந்த உயர்திணை - அஃறிணைப் பொருள்களுக்குப் பெயராக இட்டு வழங்கினார். அவரது திருநாமத்தையே ஜபித்துக் கொண்டிருந்தார். சேக்கிழார் இதனை விளக்கமாகக் கூறி. இறுதியில்,
"காண்ட கமை இன்றியு(ம்), முன் கலந்தபெருங் கேண்மையினார்".
என்று (செ. 213) குறித்தார். இக் கருத்தை,
"புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்."
என்று திருக்குறள் தன்னகத்தே பெற்றதன்றோ?
பட்டினப்பாலை (பத்துப்பாட்டு). சண்டீசர் வரலாற்றில் காவிரியின் சிறப்பை,
"பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல் நாடு"
என்று சேக்கிழார் செப்பியது.
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி"
எனவரும் பட்டினப்பாலை அடிகளை உளங்கொண்டு அன்றோ? .
சிலப்பதிகாரம்: பெரிய புராணத்துள் இசைபற்றி வரும் இடங்கள் பலவாகும். *அவற்றுள் சிறந்த பகுதி ஆனாய நாயனார் புராணத்தில் உள்ளது. இசைபற்றி வரும் இவ்விடங்களிற் கூறப்படும் செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை அடிகளிலும் அவைபற்றிய அடியார்க்கு நல்லார் உரையிலும் விளக்கமாகக் காணலாம். இஃதன்றிக் கரிகாலன் இமயம் சென்று அதன் மீது புலிப்பொறி பொறித்து மீண்ட செய்தியைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும், புகழ்ச்சோழர் புராணத்திலும் கூறினமை. சிலப்பதிகார (இந்திரவிழவூர் எடுத்த காதையில் வரும்) அடிகட்கும் அவற்றின் உரைக்கும் பொருத்தமாதல் காணத்தக்கது.
மணிமேகலை: பெரிய புராணத்திற் பெளத்த சமயத்தைப்பற்றி வரும் சம்பந்தர் புராணம் முதலிய இடங்களிற் காணப்படும் பெளத்த சமயக் குறிப்புகள் பல. மணிமேகலை என்னும் பெளத்த காவியத்திற் காணக்கிடக்கின்றன. ஆதலின் காலத்தால் முற்பட்ட இதனைச் சேக்கிழார் கவனித்தவர் என்பதில் ஐயமில்லை.
சேக்கிழார் நாட்டுச் சிறப்பில் (செ.2). அகத்திய முனிவன் கமண்டலத்திலிருந்து கவிழ்ந்த நீரே காவிரியாறாகப் பெருக்கெடுத்தது என்று குறிப்பிடும் செய்தியை
"அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை."
எனவரும் மணிமேகலை அடிகளிற் காணலாம்.
சிந்தாமணி: சேக்கிழார் சிந்தாமணியைச் சிறக்கப் படித்த சீரிய புலவர் என்பதனை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா? அதற்குச் சான்றுகள் பல காட்டலாம். இடமஞ்சி இரண்டு காட்டுதும்.
1. பசிய வயல்களுக்கு இடையில் உள்ள தாமரை மலர்கள்மீது சங்குகள் இருத்தல் - ஊர்கோளால் (பரிவேடம்) சூழப்பட்ட சந்திரனின் தோற்றத்தை ஒத்திருந்தது - திருக்குறிப்புத் தொண்டர் புராணம், செ.26 இந்த உவமை,
"கட்டழற் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்துக் கொண்டார்"
என்று சிந்தாமணியில் (செ.1186) ஆளப்பட்டிருத்தல் காண்க
2. கண்ணப்பர் சிவனைவிட்டு நீங்காமையைக் கண்ட நாணன்,
"வங்கினைப் பற்றிப் போதா வல்லுடு பென்ன நீங்கான்"
என்று (செ.116) கூறிய உடும்பைப்பற்றிய உவமையே சிந்தாமணியில்,
"தணக்கிறப் பறித்த போதும் தானளை *விடுத்தில் செல்லா
நிணப்புடை உடும்பன்னாரை...."
என்று (செ.2887) கூறப்பட்டிருத்தல் காணத்தக்கது.
தொல்காப்பியம்: முல்லை நிலத்திற்குக் கடவுள் திருமால். இதனைத் தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகம்"
என்று கூறிப் போந்தார். இதனையே சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில்,
"முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண்மால் "
என்று விளங்கவுரைத்திருத்தல் காண்க, ஐந்திணைச் சிறப்பு, திணை மயக்கம், பெரும்பொழுது சிறுபொழுதுகள், காதலர் களவு நிலை முதலிய பற்றிவரும் பெரியபுராணச் செய்திகட்கு இலக்கணம் தொல்காப்பியமே என்னலாம்
இறையனார் களவியல் உரை: சேக்கிழார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் அழுத்தகமாகப் படித்தவர் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். சடங்கவி சிவாசாரியார் என்பவர் சுந்தரர் குலம் முதலியவற்றை ஆராய்ந்து "ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தார்" என்று சேக்கிழார் குறித்துளர். இஃது, "இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையராய்..." எனவரும் களவியல் உரையுடன் வைத்து ஒப்புநோக்கத் தக்கது.
சமய நூற்புலமை
சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும படிதது அநுபவித்தாற்போல வேறு எவருமே படித்திரார் என்பது, பெரிய புராணத்தைப் பழுதறப் படித்த அறிஞர் அறிவர். அவர், திருப்பதிகங்களைத் தம் பெரியபுராணத்துட் கையாண்டிருத்தலே இதற்குத் தக்க சான்றாகும். அவர் திருப்பதிகங்களைக் கையாண்ட சில முறைகளை இங்குக் காண்போம்.
1.சேக்கிழார் பல இடங்களில் பதிக முதற் குறிப்பைக் கூறி... என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார் என்று சொல்லிச் செல்வார்.
"பித்தாபிறை சூடி எனப் பெரிதாந் திருப்பதிகம்
இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார்.
2. சில இடங்களில் பதிகத்தின் முதலும் ஈறும் குறிக்கப்படும்.
"ஈன்றாளு மாய் எனக் கெந்தையு மாகி" எனவெடுத்துத்
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்கட்கெ"ன்று
வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே. "
3. நாயன்மார் திருப்பதிகச் செய்யுளே புராணச் செய்யுளில் அமைக்கப்பட்டிருக்கும்.
"செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றின் முன்தேவா சிரிய்சார்ந்து,
கொய்யுலா மலர்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்" என்(று)
எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்தங்கிருத்தார் அன்றே."
4. திருப்பதிகத்தின் கருத்து புராணத்தில் - பல பாக்களில் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர் "தோடுடைய" என்று தொடங்கிப் பாடிய பதிகத்தின் கருத்தைச் சேக்கிழார் பல செய்யுட்களில் (செ. 75-79) விளக்கிக் கூறியுள்ளார். தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தீயைச் சம்பந்தர், "பையவே சென்று பாண்டியற்காக" என்று ஏவினர். அவர் "பையவே" என்று சொன்னதற்குரிய காரணங்களைச் சேக்கிழார் விளக்குதல் நயமுடையது:
"பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்",[1]
ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் [2], அரயன் பால் அபராதம் உறுதலாலும், [3]
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும் [4], வெண்ணீறு
வெப்பகலப் புகலிவேந்தர்
தீண்டியிடப் பேறுடையான் ஆதலாலும்[5] தீப்பணியைப் "பையவே செல்க" என்றார்".
5. சேக்கிழார் நாயன்மார் பதிக வகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார் சான்றாக, "அப்பர் திருப்பூந்திருத்தி மடத்தில் தங்கி இருந்த பொழுது (1) பல்வகைத் தாண்டகம், (2) பரவும் தனித் தாண்டகம், (3) அடைவு திருத்தாண்டகம், (4) திரு அங்கமாலை முதலியவற்றைப் பாடினார்" என்று ஒரே பாட்டில் இவ்வகைகளை அடக்கிப் பாடியிருத்தல் கவனிக்கத்தக்கது.
"பல்வகைத் தாண்டகத் தோடும் பரவுத் தனித்தாண் டகமும்
அல்லள் அறுப்பவர தானக் தடைவு திருத்தாண் டகமும்
செல்னதி காட்டிப் போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்(டு)
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்."
6. நாயன்மார் பாடிய பதிகச் சந்தத்திலேயே அப்பதிகங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார் பாக்களும் அமைந்திருத்தல் கண்டு இன்புறத்தக்கது. "பித்தா, பிறைசூடி" என்ற திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடினார் என்று கூறும் சேக்கிழார் பாக்களும் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்துப் பாராட்டத்தக்கது.
"கொத்தார்மலர்க் குழலாளொடு கூறாய் அடி யவர்பால்,
மொத்தாயனும் இனியானை அவ் வியன்நாவலர் பெருமான்
"பித்தா, பிறைசூடி, எனப் பெரிதாம்திருப் பதிகம்
இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார்."
7. நாயன்மார் பாடலை கவி கூற்றாக அங்கங்கே அமைக்கும் திறமையும் சேக்கிழார் பெருமானுக்கு உண்டு. சான்றாக ஒன்று கூறுதும்; அப்பர், நமிநந்தி அடிகள் சிறப்பைத் தமது திருவாரூர்ப் பதிகத்தில்,
"ஆராய்ந்த தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கி….."
என்று தொடங்கிப் பாடிப் பாராட்டியுள்ளனர். சேக்கிழார் இதனை நினைவிற்கொண்டு அந் நமிநந்தி அடிகள் புராணத்தில்,
"நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதியாகவே
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் காணி யெனும்
பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்."
என்று பாடியுள்ளார்.
8. சேக்கிழார் பல இடங்களில் திருப்பதிகங்களின் உட்குறிப்பை எடுத்துக் காட்டுவர்.
9. பெரிய புராணம் தேவாரத்திற்கு உரை காணப் பெருந்துணையாக இருப்பது என்னலாம். சேக்கிழார், வையை யாற்றில் எதிர்சென்ற ஏட்டில் அடங்கிய திருநள்ளாற்றுப் பதிகத்தின் பொருளை மிகவும் விரிவாகக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.
திருவாசகம்: சேக்கிழார் திருவாசகத்திலும் சிறந்த புலமையுடையவர் என்பது தெரிகிறது. மணிவாசகர், சண்டீசர் வரலாற்றைக் கூறி,
"சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்....."
என்று கூறியுள்ளார். சேக்கிழார் இதனை அதே சண்டீசர் புராணத்தில்,
"...ஈறி. லாதார் தமக்கன்பு தந்த
அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால்"
என்ற அடிகளில் ஆண்டிருத்தல் காண்க.
திருமந்திரம்: சேக்கிழார் பாடியுள்ள திருமூலர் புராணத்தைக் காணின், அவர், திருமந்திரத்தைத் திறம்பட படித்துணர்ந்தவர் என்பது தெள்ளிதிற் புலனாகும். சேக்கிழார் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் இறைவனது இலக்கணத்தை,
"ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய (பொருளுமாகி……
என்று கூறியுள்ளார். இக்கருத்து.
"யாரறி வாரெங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வாரந்த அகலமும், நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே."
எனவரும் திருமந்திரச்செய்யுளில் பொதிந்திருத்தல் காணலாம்.
சைவ சித்தாந்தம்: சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் சிறந்தனவாகக் கூறப்படும் சிவஞான போதம், சிவஞான சித்தியார் என்பவற்றிற் குறிக்கப்படும் விழுமிய சித்தாந்தக் கருத்துகள், இந்நூல்கள் வெளிவரா காலத்திலேயே சேக்கிழாராற் பெரிய புராணத்துள் கூறப்பட்டுள்ளன.
1. சேக்கிழார், மானக்கஞ்சாற நாயனாரது அடியார் பக்தியைப் பாராட்டுமிடத்து. "அவர் சிவனடியாரை சிவபெருமானாகவே கருதி வழிபட்டவர் என்று குறித்துள்ளார். இக்கருத்து சிவஞான போதம் 12-ஆம் சூத்திரத்தும் அதன் உரையிலும் காணலாம்.
2. சேக்கிழார் அதே புராணத்தில், "சிவனடியார் ஆதலே பெரும்பேறு" என்று குறிப்பிட்டனர். இதே கருத்து அவர்க்குப் பின்வந்த சிவஞான சித்தியாரில்,
"வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது."
என்று விளக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது.
"சைவ சித்தாந்த் சாத்திரங்கள் பதினான்கிற்கு முன் வாழ்ந்த சேக்கிழார் எந்தச் சித்தாந்த நூல்களைப் பயின்றவர்?" என்ற கேள்வி எழும் அன்றோ! இக்கேள்விக்கு விடை. பதினொரு திருமுறைகளும் இராச சிங்கன் கல்வெட்டிற் காணப்பட்ட சைவ சித்தாந்த நூல்களுமே யாம். "சைவ சித்தாந்தத்தில் வல்லவன் என்று இராசசிங்கன் கூறப்பட்டான் எனின், அவன் காலத்தில், (கி.பி. 690-720) சைவ சித்தாந்த நூல்கள் இத் தமிழ் நாட்டில் இருந்தன என்பது வெள்ளிடை மலையன்றோ? அந் நூல்களிலும் சைவத் திருமுறைகளிலும் பொதிந்துள்ள சைவசித்தாந்தக் கருத்துகளையே சேக்கிழார் தமது பெரிய புராணத்துட் பல இடங்களிற் குறித்துள்ளனர்.
இசைக்கலை: சங்க காலத்திலிருந்தே இசை, நடனம் போன்ற நாகரிகக் கலைகள் தமிழர் வாழ்வில் வீறு கொண்டிருந்தன. அவை இடைக்காலத்தில் சமய வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டாற்றும் கருவிகளாகக் கொள்ளப்பட்டன. திருமுறைகள் சமயாசிரயர் கால முதல் பண்ணோடு பயிலப்பட்டன. அதனால், தமிழிசை பற்றிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. அவ்வாறு இசைப்பற்றிய நூல்கள் மிக்கிருந்தமையாற்றான், அடியார்க்கு நல்லார், அரங்கேற்று காதைக்குச் சிறந்த உரைகாண முடிந்தது. அவ்விசை நூல்களைச் சேக்கிழார் அழுத்தமாகப் படித்தவர் என்பது, இசைபற்றிய அவருடைய பாடல்களிலிருந்து நன்குணரலாம். சான்றாகச் சில இடங்களை காண்க:
1. "இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய "பித்தா, பிறை சூடி" என்று தொடங்கும் முதற் பதிகம் "இந்தளம்" என்ற பண்ணிற் பாடப்பட்டது. அதனைச் சுந்தரர் இன்ன முறையிற் பாடினார்" என்று சேக்கிழார் விளக்கிக் கூறலைக் காண, அவரது இசைப் புலமை இற்றென இனிது விளங்கும்.
"முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில்
குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால்
நிறைபாணியின் இசைகோள் புணர் நீடும்புகழ் வகையால்
இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான்.
- தடுத்தாட்கொண்ட புராணம், 75.
2. ஆனாயர் புராணத்தில், (1) புல்லாங்குழலுக்குரிய மூங்கிலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை, (2) அக்குழலை வைத்து ஆனாயர் பாடிய முறை, (3) அக்குழல் இசையால் உயிர்கள் உற்ற இன்பம் முதலியவற்றை மிகவும் தெளிவாகக் கூறியுள்ள முறையை நோக்க,சேக்கிழார் இசைத் துறையிற் பண்பட்ட புலமை உடையவர் என்பதைத் தெளிவாக உணரலாம்.
நடனக்கலை: அப்பர் திருப்புகலூரில் தம் இறுதி நாட்களைக் கழித்துக்கொண்டு இருந்தபொழுது அவரது உள்ளத்தைப் பரிசோதிக்கச் சிவபெருமான் ஏவற்படி தேவலோக நடனமங்கையர் வந்து அப்பர்முன் தோன்றினர். ஆடல்பாடல்களை நிகழ்த்தினர் என்ற இடத்தில், சேக்கிழார், ஆடல் பாடல் பற்றிய நுட்பங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
1. "வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில் தருமலங்கா ரத்தன்மை
கான்அமு தம்பரக்கும் கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி பரப்பி இசைபாடுவார்."
2. "கற்பகப்பூந்த தளிரடி போய்க் காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட்ட ணையோடுங் கைபெயரப்
பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடுவார்."
--- அப்பர் புராணம், செ. 419-420
வானநூற் புலமை: பெரிய புராணத்துட் கூறப்படும் கார்காலம்,பனிக்காலம், இளவேனில் முதலியவற்றைப் பற்றிச் சேக்கிழார் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வான நூற் புலமையையும் அவ்வப் பருவகால மாற்றங்களை அளந்துகூறும் அறிவு நுட்பத்தையும் நன்குணரலாம். "குரியன் துணைப்புணர் ஓரையைச் சேர்ந்தான், அதனால் வெங்கதிர் பரப்பினான், பரப்பவே இளவேனில் முதுவேனிலாயிற்று" என்று சேக்கிழார் கூறல் நுட்பம் வாய்ந்ததாகும்."துணைப்புணர்ஓரை" என்பது மிதுனமாகும். மிதுனம் இரட்டை ஆதலின், துணைப்புணர் ஓரை" என்றார். இதுவன்றோ வானநூற் புலமை நுட்பம்!
"மகிழ்ந்த தன்தலை வாழுமந் நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவுமேழ் கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்."
-சம்பந்தர் புராணம், செ.384
உடல்நூற் புலமை: "மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக் கட்டை கிடைக்காமற்போகவே, அவர் சந்தனக்கல் மீது தம் முழங்கையைத் தேய்த்தார். அதனால் புறந்தோல், நரம்பு எலும்பு கரைந்து தேய்ந்தன என்று சேக்கிழார் கூறல் கூர்ந்து நோக்கத் தக்கது. "உள்ளே நின்ற எலும்பு, நரம்பு, தசை, இரத்தம் முதலியவற்றை ஒன்றாகப் பொதிந்து மேலே கட்டிய புறந்தோல் முதலில் தேய்ந்தது, அதனை அடுத்து நரம்பு தேய்ந்தது, பின் எலும்பும் தேய்ந்தது என்பது இதன் பொருள். இம்முறை வைப்பு உடல் நூலுக்கு இயைந்ததே யாகும்."[2]
-----------
[2] C.K.S. Mudaliyar - Periyapuranam, Vol II pp. 1276-77
1. நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுத் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டத்திகம் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறத் தோல்தரம் பென்பு கரைந்து தேய."
2. கல்லின்புறத் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்ஙனும் என்பு திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்ப ரானார்
அல்லின்கண் எழுந்தது வந்தருள் செய்த வாக்கு"
-- மூர்த்தியார் புராணம். செ. 20-21.
மருத்துவக்கலை: சேக்கிழார் மேற்கூறிய கலைகளிற் புலமை பெற்றாற் போலவே மருத்துவக் கலையிலும் திப்பியப் புலமை சான்றவராக இருந்தனர் என்பது தெரிகிறது. சேக்கிழார், இக்காலத்துச் சிறந்த, மருத்துவ நிபுணர் ஆராய்ந்து வியந்து பாராட்டத்தக்க முறையில் மருத்துவக் கலைநுட்பங்களை ஆங்காங்கு விளக்கியுள்ளார்.
(1) சூலை நோய், (2) கண்ணோய், (3) பாம்புக்கடி, (4) முயலகன் என்ற நோய், (5) பனி நோய், (6) வெப்பு நோய் முதலியவற்றைப் பற்றி அவர் கூறியுள்ள விவரங்கள் படித்து ஆராயத் தக்கவை. இங்குச் சான்றாக இரண்டு காண்போம்.
1. வெப்பு நோய். இது சம்பந்தரால் ஏவப்பட்டுப் பாண்டியன் நெடுமாறனைப்பற்றிய கொடிய ஜ்வர நோய் ஆகும். இது வடமொழியில் "ஆகந்துக ஜ்வரம்" எனப்படும்: ஆகந்துகம் என்பது அடி முதலியன தாக்குவதாலும் சாபம் முதலியவற்றாலும் பூர்வரூபம் இல்லாமல் திடீரென்று உண்டாகும் ஜ்வரம், இது நான்கு வகைப்படும். அவை (1) அபிகாத ஜ்வரம், (2) அபிஷங்க ஜ்வரம், (3) சாப ஜ்வரம், (4) அபிசார ஜ்வரம் என்பன. இவற்றுள் சாப ஜ்வரம் ரிஷிகள், ஆசாரியர், தேவதைகள் முதலியவர்கள் இடும் சாபத்தினால் திடீரென உண்டாவது. இது பொறுக்க முடியாத கொடிய ஜ்வரம். இது வாய் பிதற்றலும் நடுக்கமும் உண்டாக்கும் [3].
"நெடுமாறனுக்கு உண்டான வெப்பு நோய் சாப ஜ்வரம் ஆகும். அஃது அரசனுக்கு உடல் நடுக்கத்தையும் கொடிய உஷ்ணத்தையும் உண்டுபண்ணியது. அது மருத்துவப் புலவரால் ஒழிக்கப்படவில்லை. அரசன் வாய் பிதற்றலானான்" என்ற விவரங்கள் சேக்கிழார் கூறக் காணலாம். இக் கூற்று மேற்சொன்ன மருத்துவர் கூற்றுடன் ஒன்றுபடல் காண்க.
----------
[3] இதன் விவரங்கள் "சார்ங்கதர சம்ஹிதை, அஷ்டாங்க ஹிருதயம், மாதவ நிதானம்" என்ற மருத்துவ நூல்களிற் காணலாம்.
2. சூலை நோய். "இஃது ஒருவகைக் கொடிய வயிற்றுவலி. வாதம்-பித்தம்-கபம் என்னும் மூன்றன் நிலை மாறுதல்களால் நிகழ்வது. இது பல துன்பங்களைத் தருவது. சிகிச்சைக்கு வசப்படாதது. வயிற்றுக் குடைச்சல், வயிற்று இறைச்சல், நாவறட்சி, மூர்ச்சை, பொருமல், வயிறு மந்தமாக இருத்தல், வாய் சுவை உணர்வு அற்று இருத்தல், கபம் அதிகரித்தல், பெருமூச்சு விடல், விக்குள் உண்டாதல் முதலிய துன்ப நிலைகள் இந்நோயினால் தோன்றும்" என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.[4]
------------
[4] இதன் விவரம் மாதவ நிதானம், வைத்ய சார சங்கிரகம் போன்ற மருத்துவ நூல்களிற் காணலாம்.
சூலை நோயினால் வருந்திய அப்பர்க்கு இத்துன்பங்கள் உண்டாயின என்பது அவருடைய வாக்காலும் சேக்கிழார் வாக்காலும் அறியலாம். .
அப்பர் வாக்கு:
(1) "தோற்றாதென் வயிற்றி னகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்...."
(2) வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயற்றி னகம்படியே
பறித்துப்புரட் டியறுத் திடநான் அயர்த்தேன்..... "
(3) "கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்...." .
(4) "வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்..... "
சேக்கிழார் வாக்கு:
(1) "...கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலை அவர் வயிற்றினிடைப் புக்கதால்.
(2) "அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையும் அது
வடஅனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம்
கொடியஎலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கிஅமண் பாழியறையிடைவிழுந்தார்.
(3) "உச்சமுற வேதனைநோய் ஓங்கியெழ….
(4) "கொல்லாது சூலைநோய் குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார்......"
- அப்பர் புராணம் செ. 49-51, 57
நீதிநூற் புலமை: நீதிநூற் புலமையிலும் சேக்கிழார் சிறந்திருந்தார் என்பதைத் தடுத்தாட்கொண்ட புராணத்தாலும் கண்ணப்பர் புராணத்தாலும் சண்டீசர் புராணத்தாலும் நன்கறியலாம். சான்றாக ஒன்று காண்போம்.
சிவபெருமான், சுந்தரர் திருமணத்தைத் தடுக்க மறையவராக வந்தார். சுந்தரர்க்குப் பாட்டனார் தமக்கு வழிவழி அடிமை செய்வதாகப் பத்திரம் ஒன்று எழுதித் தந்தார் என்றும், அதன்படி சுந்தரர் தமக்கு அடிமை என்றும் வாதித்தார். அவர் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதன் மூல ஓலை (Original) திருவெண்ணெய் நல்லூர்ச் சபையாரிடம் அரண் தரு காப்பில் (Safe custody) இருந்தது. ஒலையைக் கிராம நீதிபதிகளாகிய ஊரவையார்முன் வாசிக்கக் கரணத்தான் (Clerk of the village court) இருந்தான். வழக்கு விசாரணையில் ஆட்சி (Oral Evidence), ஆவணம் (Documentary Evidence) அயலார் காட்சி (Circumstantial Evidence) என்பன கவனிக்கப்பட்டன. சேக்கிழார் இவை அனைத்தையும் மிகவும் விளக்கமாகக் கூறியுள்ளளமை [5] நோக்க, அவரது நீதிநூற் புலமை எண்ணி எண்ணிக் களிக்கத் தக்கதாகும்.
------------
[5] தடுத்தாட்கொண்ட புராணம், செ. 41-62
சேக்கிழார் செய்யுட் சிறப்பு
1. சேக்கிழார் செய்யுட்கள் பிற புலவர் பாக்களைப் போலக் கரடு முரடானவை அல்ல. அவை எளிய நடையில் அமைந்தவை. செம்பகாமானவை. சான்றாகக் கடவுள் வாழ்த்தையே காண்க.
""உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."
2. சேக்கிழாருடைய பெரும்பாலான பாடல் வரிகள் நிறுத்தக்குறிகள் பெய்யப்படின், எளிய, தனித்தனி வாக்கியங்களாக அமைதலைக் காணலாம்.
"சன்னியால் வணங்கிநின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி,
தன் இது மொழிந்த வாநீ? யான்வைத்த மண்ணோ டன்றிப்
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற
என்னை நான் வைத்த ஓடே கொண்டுவா" என்றான் முன்னோன்."
- திருநீலகண்டர் புராணம். 24.
3. " பாக்களில் சொற்சிதைவு நேர்தல் பெரும்பாலும் தடுக்கப்படல் வேண்டும்" என்பது இன்றைய தமிழ்ப் புலவர் கொள்கை. இதனைச் சேக்கிழார் அக்காலத்திற் தானே கொண்டிருந்தவர் என்பதை அவர் பாக்கள் சிலவற்றால் அறியலாம்.
"அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணி ஒட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை யூர் பணிந்து பாடிச் செல்வார்."
-- அப்பர் புராணம் - 179
4. அவ்வத் தலத்தைப் பற்றிக் கூறுகையில் அத்தலத் தொடர்பான பண்டை நிகழ்ச்சிகளை மறவாது கூறும் இயல்பு சேக்கிழாரிடம் உண்டு. இதனைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் பரக்கக் காணலாம்.
5. சேக்கிழார். தன்மை நவிற்சி ஒன்றையே பெரும்பாலும் கையாண்ட சங்ககாலப் புலவரைப் போன்றவர் ஆவர். ஆதனுர்ச்சேரி வருணனை, நாகை-நுளைப்பாடி வருணனை, உடுப்பூர்-வேடர்சேரி வருணனை என்பவற்றைப் படிப்பார்க்கு இவ்வுண்மை விளங்கும்.
6. இடத்திற்கு ஏற்பச் சந்தங்கள் அமைத்து பாடுதல் என்பது பெரும் புலவர் வழக்கம். அதனை சேக்கிழாரிடம் சிறப்புறக் காணலாம். கண்ணப்பர் வேட்டைக்குப் புறப்படல், வேட்டையாடல், புகழ் சோழர் படைகள் போரிடல் போன்ற இடங்களில் எல்லாம் அதனதனுக்குரிய சந்தம் அமைத்திருத்தலை காண்க .
7. சேக்கிழார் கடுஞ்சொற்களைக் கூற அஞ்சியவர் என்பது பெரியபுராணத்தை ஊன்றிப் படித்து உணர்ந்த ஒன்றாகும். பகைவன் சிவனடியாரைக் குத்த திரும்பி, அடியார் வேடத்தில் வந்து, அமயம் பார்த்துக் குத்தியதைக் - கூறவந்த சேக்கிழார்,
"பகைவன், நினைந்த அப் பரிசே செய்தான்."
என்று நயம்படக் கூறல் காணலாம். இங்ஙனமே பிறிதோர் இடத்திலும்,
"பகைவன், தன்கருத்தே முற்றுவித்தான்
என்று தீயதை மறைத்துக் கூறியிருத்தல் காண்க.
சேக்கிழார் செய்யுட்களின் சிறப்பியல்புகள் மேலும் பலவாகும். நீவிர் அவற்றை மூல நூல் கொண்டு படித்துச் சுவைத்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒப்பற்ற உயரிய புலவர். எல்லாக் கலைகளிலும் வல்லவர். பிற புலவர் நூல்களிற் பேரளவிற் காணப்பெறாத திணை மயக்கம் முதலியன விளங்கக்கூறி நம்மை வியப்புறுமாறு செய்விக்கும் பேராற்றல் மிக்க பெரும்புலவர். திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டைநாட்டு வருணனையில் வரும் குறிஞ்சி, பாலை, முல்லை,மருத்தம், நெய்தல் என்ற ஐந்திணைகளின் பொது இலக்கணமும், பின் சிறப்பிலக்கணமும், பிறகு ஒவ்வொரு நிலத்துக் கருப்பொருள் உரிப்பொருள்களும் பிறவும், அவற்றின் பின் திணைமயக்கமும் (நெய்தலும் குறிஞ்சியும் மயங்குதல், மருதமும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல் போன்றவை) படித்துப் படித்து இன்புறத்தக்கவை. தொல்காப்பியத்துள் குறிப்பாகக் கூறப்பட்ட இத் திணை மயக்க இலக்கணத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளாகச் சேக்கிழார் பாக்கள் இலங்கக் காணலாம். இத்தகைய வியத்தகு புலமையுணர்வை நன்குணர்ந்தே காஞ்சிப் புராணத்துள் தொண்டை நாட்டு வருணனையைக் கூறப்புகுந்த மாதவச் சிவஞானயோகிகள்,
"திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத் தினைவளமும் தெரித்துக் காட்ட
மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர்க் குல கவியே வல்லான் அல்லால்
கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார்!....."
என்று சேக்கிழார் பெருமானைப் பாராட்டியுள்ளார். எனின், அப்பெரும் புலவர் புலமைத்திறனைப் பாராட்டாதார் யாவர்?
இத்தகைய பெரும் புலவர் காவியங்களைத் தமிழ் மக்கள் படித்து இன்புற்று அப்புலவர் நாட்களை நாட்டவர் அறியச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் நாளே தமிழ் வளர்ச்சிக்குரிய நன்னாள் ஆகும்.