கலீல் ஜிப்ரான்

bookmark

கலீல் ஜிப்ரான் என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான், ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலைகளை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார். அன்பான சிந்தனைகள், தெளிவான எண்ணப்போக்கு கொண்டவர்.

லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார்.

1902 இல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவருக்கு நட்பு ஏற்பட்டது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது.

1923 இல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.பழமையான மதத்தை தூக்கிப் பிடிக்காமல் அன்பை போதிக்கிற பெரிய முன் முடிவுகள் இல்லாத எளிமையான கருத்துக்களால் மக்களை நிறைத்தார் இவர் .

அமெரிக்காவில் ஆங்கிலப் பேராசிரியர்கள் இவரின் எழுத்தை ," நீர்க் குமிழி போல வெறுமையானது" என்று ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், காலம் இவருக்கு உறுதுணையாக இருந்தது. சில அறிவு ஜீவிகள் இவரது படைப்பை நிராகரித்தாலும் பீட்டில்ஸ் துவக்கி இந்திரா காந்தி வரை எண்ணற்ற ரசிகர்கள் இவருக்கு இருந்தனர்.

அமெரிக்காவில் இவர் வாழ்ந்தாலும், தனது சொந்த நாட்டின் மீது நிறைய அபிமானமும், தேசபக்தியும் கொண்டவர். போரால் சிதறுண்டு கிடந்த தனது நாட்டில் அமைதி நிலவாதா என்று இவர் ஏங்கிய நாட்கள் பல. பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தன்னுடைய நாட்டின் குடி உரிமையை இவர் கடைசி வரை விட்டுக் கொடுக்கவில்லை .

காசநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளால் 1931 ஏப்ரல் 10 இல் தனது 48 ஆவது வயதில் கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார். இறந்த பின்னர் தன்னைத் தன்னுடைய நாட்டிலேயே புதைக்க வேண்டும் என்கிற அவரின் விருப்பம் நிறைவேற்றப் பட்டது. கீழ்க்கண்ட இந்த வரிகளை அவரது கல்லறையில் பதிக்க அவர் விரும்பினார் , அதன் படி அந்த வரிகளும் அவரது கல்லறையில் பதிக்கப்பட்டது. அந்த வரிகள் பின் வருமாறு " நான் உன்னைப் போலவே உயிர்ப்புடன் இருக்கிறேன். உனக்குப் பக்கத்தில் நான் நிற்கிறேன் . கண்களை மூடிக் கொண்டு உன்னை சுற்றிப் பார் . உனக்கு முன்னாள் என்னைக் காண்பாய் !"