எழுச்சிப் படலம் - 844
சேனை போர்க் களத்தை யொத்தது எனல்
844.
அமரர் அம் சொல் அணங்கு அனையார் உயிர்
கவரும் கூர் நுதிக் கண் எனும் காலவேல்.
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்.
சமர பூமியும் ஒத்தது - தானையே.
தானை - அந்தச் சேனையானது; அம்சொல் அமரர் அணங்கு -
இனிய மொழி பேசுபவரும். தெய்வப் பெண்ணை; அனையார் -
ஒத்தவருமாகிய மகளிர்; உயிர் கவரும் - (தமக்கு இலக்கானவரின்)
உயிரைக் கவரவல்ல; கூர் நுதிக்கண் எனும் - கூரிய நுனியோடு கூடிய
கண்கள் என்று சொல்லப்படுகின்ற; காலன்வேல் - இயமனுடைய
வேற்படையை; குமரர் நெஞ்சு - காளையர் நெஞ்சில்; குளிப்ப
வழங்கலால் - தைக்கும்படி செலுத்துவதால்; சமர பூமியும் -
போர்க்களத்தையும்; ஒத்தது - ஒத்துள்ளது.
போர்க்களம் வீரர் நெஞ்சு தைக்க வேல் வழங்குவது போலத்
திருமணத்திற்காகச் செல்லும் சேனையில் உள்ள பெண்களின் கண்
என்று சொல்லக்கூடிய கூற்றுவன் வேல் காளையர் நெஞ்சில் பதியச்
செலுத்துவதால் தானை போர்க்களமாயிற்று என்பது - அவநுதியணி. 28
