உண்டாட்டுப் படலம் - 1058
ஒருத்தி வள்ளத்துள் நிலவை மதுவென மயங்கல்
1058.
புறம் எலாம் நகைசெய்து ஏசப்
பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள்.
மணியின் வள்ளத்து. வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய.
நிறைந்தது போன்று தோன்ற.
நறவு என. அதனை. வாயின்
வைத்தனள்; நாண் உட்கொண்டாள்.
வேறு ஓர் மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் - கொடுமை
திகழும் கொலைத் தொழிலைச் செய்யும் வேல் போன்ற
கண்ணினையுடைய வேறு ஒரு மங்கை; மணியின் வள்ளத்து வெள்ளை
நிலாக் கற்றை பாய - (தான் ஏந்திய) மணிகள் பதித்த (பளிங்கு மதுக்)
கிண்ணத்தில் வெள்ளை நிற நிலாக்கதிர்கள் பாய்ந்ததனால்; நிறைந்தது
போன்று தோன்ற - (அந்தப் பளிங்குக் கிண்ணம் மது)
நிறைந்திருப்பது போலத் தோன்றியதனால்; நறவு என அதனை
வாயின் வைத்தனள் - மதுவென்று கருதி. அக் கிண்ணத்தை வாயில்
வைத்தாள்; புறம் எலாம் நகைசெய்து ஏச நாண் உட்கொண்டாள் -
பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் (வெறுங் கிண்ணத்தை இவள்
வாய் வைத்து உறிஞ்சுவது கண்டு) நகைத்து இகழ. தானும்
தன்னுள்ளே நாணம் (மிகக்) கொண்டாள்.
மது உண்ணா முன்னமே. அதன் நினைவுகூட மயக்கம் செய்விக்க
வல்லது என்றவாறு. புறம் எல்லாம் நகை செய்யவும். தானும்
வெட்கமுறவும் செய்ய வல்லது மது விருப்பம் என்று
நிகழ்ச்சியொன்றின் வாயிலாய் உணர்த்தினார். கொலைவேற்
கருவியிருந்தும் நாணம் தவிர்க்க இயலாதாயிற்று. நறவு உட்
செல்லுமுன் நாணம் உட்சென்றது என்றுரைத்த நயம் காண்.க. 12
