உண்டாட்டுப் படலம் - 1052

bookmark

மகளிர் மதுக் குடித்தல்

1052.

பூக்கமழ் ஓதியர். போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்.
ஆக்கிய அமிழ்து என. அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா. மாந்தல் மேயினார்.
 
பூக்கமழ்     ஓரியர்   -    பூக்களின்   நறுமணம்   கமழ்கின்ற
கூந்தலையுடைய பெண்டிர்;போது போக்கிய சேக்கையின் விளைசெரு
-  மலர்கள்  (மிகப்)  பரப்பிய  படுக்கைகளிலே   விளைகின்ற  கலவிப்
போரிலே;   செருக்கும்   சிந்தையர்   -   களிக்க   வேண்டுமென்ற
மனத்தினராய்;  ஆக்கிய  அமிழ்தென - அப்போரில் வெல்வதற்கென
ஆக்கப்பட்ட  அமிழ்தம்  போல; அம்பொன் வள்ளத்து வாக்கிய பசு
நறை  -  அழகிய  பொற்கிண்ணத்தில் ஊற்றிய  புதுமதுவைப்; மாந்தல்
மேயினார் - பருகத் தொடங்கினர். 

சோர்வு.   களைப்பு ஆகியவை போக்கி. இறப்பு நீக்கி. இளமை நல்க
வல்லது   அமிழ்து  ஆதலின்.   கலவிப்   போர்க்கு  இவை  செய்யும்
அமிழ்தென்று   மதுவுண்டனர்  என்க.   போது   போக்கிய:  மலர்கள்
போடப்பட்ட பொழுது போக்குவதற்காக. சிலேடை. அவனிப்  போருக்கு
ஆக்கிய  மது  அன்று  இது:  அமளிப்  போருக்கு  என்றே  ஆக்கிய
அமிழ்தம்  இது  என்பார்.  “சேக்கையின்   விளை  செருச்  செருக்கும்
சிந்தையர் ஆக்கிய அமிழ்தென்” என்றார்.  சேக்கை:  படுக்கை.  அமளி.
செரு:  போர்.  வாக்கிய:  வார்த்த. செம்பொன் வள்ளம்  வளம்  மிகுதி
குறித்தது.                                                  6