ஆறு செல் படலத்தின் பாடல்கள்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
ஆறு செல் படலம்
பொய்கைக் கரையில் வானரர் துயில துமிரன் வருதல்
அங்கதன் மார்பில் அசுரன் அறைதல்
அங்கதன் எற்ற, அசுரன் அலறி இறந்து வீழ்தல்
அசுரனைப் பற்றி அனுமன் வினாவ, அங்கதன் யான் அறியேன் எனல்
சாம்பன் துமிரன் வரலாறு கூறல்
மறுநாள் பெண்ணையாற்றை அடைந்து தேடுதல்
பெண்ணையாற்றைக் கடந்து, தசநவ நாடு அடைதல்
தவத்தோர் வடிவில், விதர்ப்ப நாட்டில் தேடுதல்
முண்டகத் துறையை அடைதல்
பாண்டு மலைச் சிகரத்தை வானரர் அடைதல்
வானரர் கோதாவரியை அடைதல்
வானரர் கவணகத் துறை புகுந்து, குலிந்த தேசத்தைக் கடத்தல்
சுரும்பொடு தேனும், வண்டும், அன்னமும், துவன்றி; புள்ளும்,
கரும்பொடு செந் நெல் காடும், கமல வாவிகளும், மல்கி;
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்கச் சென்றார்;
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும், புறத்துக் கொண்டார்.
அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து, வேங்கட மலை சேர்தல்
கொங்கணம் ஏழும் நீங்கி, குட கடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல்-தண் புனல் தவிர ஏகி,
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத், தேவர்
அங்கைகள் கூப்ப, நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார்.
அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு, அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார்; இடையர் மாதர்
பெருந் ததிக்கு அருந் தேன் மாறும் மரகதப் பெருங் குன்று எய்தி,
இருந்து, அதின் தீர்ந்து சென்றார், வேங்கடத்து இறுத்த எல்லை -
திருவேங்கட மலைச் சிறப்பு
முனைவரும், மறை வலோரும், முந்தைநாள் சிந்தை மூண்ட
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும், விண்ணோர்
எனைவரும், அமரர் மாதர் யாவரும், சித்தர் என்போர்
அனைவரும், அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார்.
பெய்த ஐம் பொறியும், பெருங் காமமும்,
வைத வெஞ் சொலின், மங்கையர் வாட் கணின்,
எய்த ஐம் பெரு வாளியும், ஏன்று இற,
செய் தவம் பல செய்குநர் தேவரால்.
வலம் கொள் நேமி மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை தாங்கிய அம் மலை
விலங்கும் வீடு உறுகின்றன; மெய்ந் நெறி
புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ?
ஆய குன்றினை எய்தி, அருந் தவம்
மேய செல்வரை மேவினர், மெய்ந் நெறி
நாயகன் தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார்.
வானரர் அந்தணர் வடிவுடன் தொண்டை நாட்டை அடைதல்
சூடி, ஆண்டு அச் சுரி குழல் தோகையைத்
தேடி, வார் புனல் தெண் திரைத் தொண்டை நல்
நாடு நண்ணுகின்றார், மறை நாவலர்
வேடம் மேயினார், வேண்டு உரு மேவுவார்.
தொண்டை நாட்டு வளப்பம்
குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம்.
சூல் அடிப் பலவின் சுளை தூங்கு தேன்,
கோல் அடிப்ப வெரீஇ, குல மள்ளர் ஏர்ச்
சால் அடித் தரும் சாலியின் வெண் முளை,
தோல் அடிக் கிளை அன்னம், துவைப்பன.
செருகுறும் கணின் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர்
இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால்.
தெருவின் ஆர்ப்புறும் பல் இயம் தேர் மயில்
கருவி மா மழை என்று களிப்புறா;
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா; -
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்கொலோ?
தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை,
நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ;
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று, புலம்புவ, தேரையே.
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்,
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி,
புள்ளி நாரைச் சினை பொரியாத என்று
உள்ளி, ஆமை முதுகின் உடைப்பரால்.
சேட்டு இளங் கடுவன் சிறு புன் கையில்
கோட்ட தேம் பலவின் கனிக் கூன் சுளை,
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன்
சட்டம் என்னச் சென்று, ஈஇனம் மொய்ப்பன.
வானரர் சோழ நாடு அடைதல்
அன்ன தொண்டை நல் நாடு கடந்து, அகன்
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்;
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து,
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார்.
கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரை வாழ்
தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்புடைத் தீம் கனி
இடறுவார்; நறுந் தேனின் இழுக்குவார்.
சோழ நாட்டு வளம்
குழுவும் மீன் வளர் குட்டம் எனக் கொளா,
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ் முறை
முழுகி, நீர்க் கருங் காக்கை முளைக்குமே.
பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல,
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல
வானரங்கள் மரங்களின் வைகுமால்.
மலை நாடு கடந்து பாண்டி நாடு அடைதல்
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ,
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்;
இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார்.
தென் தமிழ் நாட்டின் பெருமை
அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால், உரை ஒக்குமோ -
எத் திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து, முற்றலால்?
தென் தமிழ் நாடெங்கும் தேடிய வானர வீரர்கள் மயேந்திரமலையில் சென்று கூடுதல்
என்ற தென் தமிழ் நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து, வருந்தினார்,
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் -
துன்று அல் ஓதியைக் கண்டிலர், துன்பினார்.
வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் -
தென் திசைக் கடற் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார்.
இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.
வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான்.
குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
நின்ற அங்கதன், நெடு மராமரம்
ஒன்று வாங்கி, மற்றவன் ஒடிந்திடச்
சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே.
ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார்.
இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார்.
செல்வர் என்றும், வடகலை, தென் தமிழ்ச்
சொல், வரம்பினர் என்றும், சுமடரைக்
கொல்வர் என்றும், கொடுப்பவர் என்றும், -அவ்
இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே?
தாறு நாறுவ, வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ தூம்புகள்; மாங்கனி
நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ, செங்கழுநீர் அரோ.