ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்
1983-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர்.
ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார்.இதய அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருத்துவ மனையில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது.[47] மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். செப்டம்பர் 5, 1997இல் மரணமடைந்தார். கல்கத்தாவின் பேராயர் ஹென்றி செபாஸ்டியன் டி சோசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமெனத் அன்னை தெரேசா எண்ணிய காரணத்தால் அன்னை தெரேசாவின் அனுமதியோடு அவருக்குப் பேயோட்டும்படி ஒரு குருவைப் பணித்ததாகக் கூறியுள்ளார்.[48]
அவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட்சகோதரிகளையும், 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும் [49], 10,000கும் மேலான பொதுநிலையினரையும் கொண்டிருந்தது. இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது.
