கவிஞன்

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்
தேன்மடை திறந்த தெனவே
செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
தெரிந்துரைசெய் திறமை யுடனே
விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்
விரிவிலக் கணவி கற்பம்
வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்
மிக்கப்ர பந்த வண்மை
உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை
யொத்ததிக சபைகண் டபோ
தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம
துரைப்பவன் கவிஞ னாகும்!
அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!