திருத்தினை நகர்

bookmark

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

655

நீறு தாங்கிய திருநுத லானை

நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்

குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்

கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.1

656

பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும்

இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ

அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்

ஐயன் வையகம் பரவிநின் றேத்துந்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.2

657

வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்

மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேலெரு தேறும்

மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்

அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.3

658

பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்

பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ என்றுழந் தயர்ந்துவீ ழாதே

அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை

மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.4

659

ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்

டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்

இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்

கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.5

660

வேந்த ராயுல காண்டறம் புரிந்து

வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடுமிப்

பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்

பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.6

661

தன்னில் ஆசறு சித்தமு மின்றித்

தவ முயன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற்

பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்

மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.7

662

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்

பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்

பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்

கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.8

663

நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்

நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாஞ்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்

தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையோர் கூறனை ஏறுகந் தானை

உம்பர் ஆதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7.64.9

664

நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து

நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாடெ லாம்புகழ் நாவலூ ராளி

நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்

முத்தி யாவது பரகதிப் பயனே.

7.64.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருநந்தீசுவரர், தேவியார் - இளங்கொம்பம்மை.

திருச்சிற்றம்பலம்