திருக்கோலக்கா

bookmark

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

635

புற்றில் வாளர வார்த்த பிரானைப்

பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த

பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும்

பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.1

636

அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்

ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடை யானைத்

தழல்ம திச்சடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை

விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.2

637

பாட்ட கத்திசை யாகிநின் றானைப்

பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்ட கத்தேவர் செய்கையு ளானை

நட்ட மாடியை நம்பெரு மானைக்
காட்ட கத்துறு புலியுரி யானை

கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.3

638

ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை

அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை

வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்

தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.4

639

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்

ஆள தாகஎன் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த

நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்
கொன்றி னான்றனை உம்பர் பிரானை

உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.5

640

காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்

கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை

நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்

போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.6

641

அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்

டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்
துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த

சோதி யைச்சுடர் போலொளி யானை
மின்ற யங்கிய இடைமட மங்கை

மேவும் ஈசனை வாசமா முடிமேற்
கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.7

642

நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்

ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந்

தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்

அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.8

643

அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்

கன்றி ரங்கிய வென்றியி னானைப்
பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்

பரவி யும்பணி தற்கரி யானைச்
சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்

ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

7.62.9

644

கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்

கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப்

பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால்

நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற்

கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே.

7.62.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசுவரர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்