திருமுண்டீச்சரம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
843
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.1
844
கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.2
845
நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.3
846
மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.4
847
கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.5
848
உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே ஆடையுமாய்ப் பூணு மாகிப்
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.6
849
உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
உருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற
தலையவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.7
850
உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரந்துவரும் இருகரையுந் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6.85.9
851
அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.1
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முண்டீசுவரர், தேவியார் - கானார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
