திருவாலங்காடு – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

775

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே

ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே

நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே

கோலப் பழனை யுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.1

776

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே

வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே

சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.2

777

ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே

அளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே

புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.3

778

நாறுபூங் கொன்றை முடியார் தாமே

நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே

மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.4

779

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே

அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே

தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.5

780

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே

தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்

தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டா னிசைபாட நின்றார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.6

781

மையாருங் கண்ட மிடற்றார் தாமே

மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்

அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.7

782

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே

மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே

காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.8

783

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே

கயிலை மலையை யுடையார் தாமே
ஊரா வேகம்பம் உகந்தார் தாமே

ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.9

784

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே

வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை

நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்