திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

744

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்

சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்

கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்

மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.1

745

கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்

கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்

தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்

செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.2

746

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்

நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்

அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்

ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.3

747

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்

சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி

செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி

மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.4

748

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்

காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்

ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்

நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.5

749

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்

முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி

அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு

சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.6

750

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்

கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்

சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்

பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.7

751

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்

புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்

மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து

திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.8

752

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்

பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்

சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை

அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.9

753

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை

இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்

குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை

சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.10

754

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்

தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக

நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்

மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மடந்தைபாகேசுவரர்,
தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்