திருநாரையூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

734

சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்

சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை
அல்லானைப் பகலானை அரியான் றன்னை

அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை

வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.1

735

பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்

பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்

மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை

நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.2

736

மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை

முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்

திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை

அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.3

737

செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்

செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி

மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்

கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.4

738

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்

புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை

வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை

வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.5

739

பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்

பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை

மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரா னானை

உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.6

740

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்

தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்

கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை

அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.7

741

அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை

அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை

எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்

சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.8

742

ஆலால மிடற்றணியா அடக்கி னானை

ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்

பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி

வேள்வியினின் பயனாய விமலன் றன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.9

743

மீளாத ஆளென்னை உடையான் றன்னை

வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து

வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்

தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.10

திருச்சிற்றம்பலம்