திருவானைக்கா – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

630

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை

மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்

சார்தற் கரியானைத் தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை

எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.1

631

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை

வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை

இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்

கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.2

632

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை

முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை

ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்

பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.3

633

காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்

காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்

தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்

பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.4

634

பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்

புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை

ஏறமரும் பெருமானை இடமா னேந்து
கையானைக் கங்காள வேடத் தானைக்

கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.5

635

கலையானைப் பாசுபதப் பாணி யானைக்

கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்றலையி னுச்சி யானை

வார்தருபுன் சடையானை மயான மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து

நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.6

636

ஆதியனை எறிமணியின் ஓசை யானை

அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்

சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை

விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.7

637

மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை

மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்

பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை

ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.8

638

நசையானை நால்வேதத் தப்பா லானை

நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை

இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்

மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.9

639

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்

பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்

தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்

ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.10

திருச்சிற்றம்பலம்