திருவலம்புரம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

528

தெண்டிரை தேங்கி ஓதஞ்

சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்

தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்

வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்

குழகர்தாம் இருந்த வாறே.

4.55.1

529

மடுக்களில் வாளை பாய

வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்

பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித்

தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்

வலம்புரத் திருந்த வாறே.

4.55.2

530

தேனுடை மலர்கள் கொண்டு

திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு

அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்

வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று

நல்வினைப் பயனுற் றேனே.

4.55.3

531

முளைஎயிற் றிளநல் ஏனம்

பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்

வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகைய போர்வை போர்த்துப்

புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்

வலம்புரத் தடிகள் தாமே.

4.55.4

532

சுருளுறு வரையின் மேலாற்

றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த

இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்

அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்

வலம்புரத் தடிக ளாரே.

4.55.5

533

நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்

நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்

கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை

மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே

இனிவலம் புரவ னீரே.

4.55.6

534

செங்கயல் சேல்கள் பாய்ந்து

தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து

தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்

கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்

வலம்புரத் தடிக ளாரே.

4.55.7

535

அருகெலாங் குவளை செந்நெல்

அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்

பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே

கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்

வலம்புரத் தடிக ளாரே.

4.55.8

536

கருவரை யனைய மேனிக்

கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்

திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி

ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்

அவர்வலம் புரவ னாரே.

4.55.9

537

வாளெயி றிலங்க நக்கு

வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற

அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்

தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்

அவர்வலம் புரவ னாரே.

4.55.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.

திருச்சிற்றம்பலம்