திருநறையூர்

bookmark

பண் - பியந்தைக்காந்தாரம்

941    

நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
  யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
  யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
  நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல
  நறையூரின் நம்ப னவனே.    

01

942    

இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
  யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
  அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
  மனம்நின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
  நறையூரின் நம்ப னவனே.    

02

943    

சூடக முன்கைமங்கை யொருபாக மாக
  அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
  படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு
  குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
  நறையூரின் நம்ப னவனே.    

03

944    

சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
  கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
  இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
  மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
  நறையூரின் நம்ப னவனே.    

04

945    

நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
  நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்
  எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
  விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
  நறையூரின் நம்ப னவனே.    

05

946    

கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
  மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
  பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
  பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
  நறையூரின் நம்ப னவனே.    

06

947    

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
  மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
  விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
  எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
  நறையூரின் நம்ப னவனே.    

07

948    

அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
  எதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
  முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்
  இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
  நறையூரின் நம்ப னவனே.    

08

949    

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
  எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
  பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
  வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
  நறையூரின் நம்ப னவனே.  

09

950  

துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
  வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த
  பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
  முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
  நறையூரின் நம்ப னவனே.    

10

951    

கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
  மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
  நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
  தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
  வழிபாடு செய்யும் மிகவே.    

11

திருச்சிற்றம்பலம்