கோளறு திருப்பதிகம்

bookmark

பண் - பியந்தைக்காந்தாரம்

919    

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
  மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
  சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

01

920    

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
  எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
  உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
  உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

02

(*இரண்டாவது பாடலில் பிரயாணத் துக்காகாத
12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.
விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய
நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,
கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,
ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.)

921    

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
  உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
  திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

03

922    

மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
  மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
  கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

04

923    

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
  விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
  மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

05

924    

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
  மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
  உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
  கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

06

925    

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
  விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
  வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

07

926    

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
  மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
  உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
  இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

08

927    

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
  பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
  வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

09

928    

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
  குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
  திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே.    

10

929    

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
  வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
  மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
  நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
  அரசாள்வர் ஆணை நமதே.    

11

இப்பதிகம் திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்கு எழுந்தருளியபோது அருளிச்செய்தது.

திருச்சிற்றம்பலம்