ரவீந்திர நாத் தாகூர்

bookmark

தாடி வைத்தவர்கள் எல்லாம் தாகூர் ஆகி விட முடியாது என்று கிண்டலாக நம்மில் பலர் சொல்வதை நாம் கேட்டு இருக்கலாம். யார் இந்த தாகூர், அப்படி என்ன அவருக்கு சிறப்பு?. வாருங்கள் அவரைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

இந்திய சுகந்திர வேட்கை காலத்தில் தனக்கொரு தவப் புதல்வன் இல்லையே என்று வங்காளத் தாய் ஏங்க. அந்த ஏக்கத்தை போக்கவே வந்தார் இந்தியாவின் சிந்தனை சிற்பி, இலக்கியங்களின் படைப்பாளி,பாட்டாளிகளின் தோழன் இரவீந்திரநாத் தாகூர்.

இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். தாகூருக்கு பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

இரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டண், லண்டனில் (Brighton, London) உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் லண்டன் சர்வகலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் ஷேக்ஸ்பியர் போன்ற பிற கவிஞர்களின் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர்.

1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். ஏகத்துக்கு பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க் கொண்டு இருந்தார். அப்போது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்து போயின.நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக் கொண்டே ஸ்தம்பித்து நின்றார். அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார்.

1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.

1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். (சாந்திநிகேதன் என்ற பதத்துக்கு தமிழில் ஒரு அளவு சரியாக மொழிபெயர்க்க வேண்டும் என்றால் " அமைதியான உறைவிடம் என்று பொருள்"). அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.

இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார். 1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற மனிதர் இவரே. 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.

1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார். 1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.

இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.

1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.

1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.

1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார். சைனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.

1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது. ஒரு அற்புதமான கவிஞனை காலம் தன் கரங்களால் மரணம் என்ற பெயரில் அழைத்துக் கொண்டது. ஆனால், அந்த மரணத்துக்கு தெரியாது, அவரது படைப்புகள் மூலம் அவருக்கு என்றும் அமரத்துவம் உண்டு என்று.