மானங் கெட்ட மச்சாவி

மாமன் மகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க நிச்சயித்திருந்தார்கள். அறுவடை முடிந்ததும் திருமணம் நடை பெற வேண்டும். இதற்கிடையில் அவன் நகரத்தில் வேசியரோடு உறவு கொண்டிருக்கிறான் என்று அவள் அறிந்து கொள்ளுகிறாள். மேலும் நகரத்தில் சாமான்கள் வாங்குவதற்கென்று அவளிடம் அவன் நகைகளை வாங்கிச் சென்று வேசியருக்கு கொடுத்து விடுகிறான். கண்ணகியைப் போல “சிலம்புள கொண்ம்” என்று கூறாமல் அவள் அவனை இடித்துக் கூறித் திருத்த முயலுகிறாள். முயற்சியில் வெற்றியும் அடைகிறாள்.
காதலி : கணையாழிக் குச்சிபோல
கடும்உறவா நாமிருந்தோம்
மூக்குத்தித் தட்டுபோல
முறிந்ததடா நம் உறவு !
காதலன் : கோதி முடிந்த கொண்டை
கொத்தமல்லிப் பல்லழகி
நாகச் சிகப்பியடி-உன்னை
நம்பியே நான் கெட்டேனடி !
குடம் எடுத்து இடுப்பில் வைத்து
கோல வர்ணப் பட்டுடுத்தி
பறக்க முழிக்காதடி
படமெடுத்த நாகம் போல
மழைக்கால இருட்டிலே
மாரளவு நாணலிலே
ஒத்தையிலே போவாயோடி
ஒருவன் கைப் பத்தினியே?
கடுவு உறவானோம்
கண்டொரு நாள் பேசினோமே
இன்னொரு நாள் பேசுதற்கு
இரங்கலையே உன் மனசு !
காதலி : கானம் கருத்த கானம்
கறிக் கேத்த கொத்தமல்லி
மானங் கெட்ட மச்சாவிக்கு
மாதம் ஒரு வைப்பாட்டியா?
காத்துட்டுக்குக் கடலை வாங்கி
கழுகுமலை திருனாப் பாத்து
மிச்சக் கடலை இருக்கு-நம்ம
மச்சாவியக் கூப்பிடுங்க
பாக்குத் துவக்குதடா
பழமை உறவு மங்குதடா
ஏலம் கசக்குதடா-நம்ம
இருவரும் போற பாதை
மருதையிலே தேவதாசி
மான் மயிர் சேலைக்காரி
ஆனைமேலே கும்பம் வச்சு
ஆடுறாளே தேவதாசி
காதலன் : லேஞ்சு விரிச்சலடி
நேரே தலை வச்சுறங்கி
என்ன விட்டுக் கண்ணசர
என்ன மனம் கொண்டியடி
படுத்தா பல நினைவு
பகல் நிறைஞ்சாக் கண்ணீரு
உறக்கச் சடவிலயும்
உன் நினைவாத் தோணுதடி
படுப்பேன் எந்திருப்பேன்
பாதவத்தி உன்னாலே
காலு ரெண்டும் கல்லுத் தூணு-உன்
மேலு ரெண்டும் எண்ணெய்க்குடம்
காதலி : எண்ணெய்க் குடம் எஞ்சாமி
எண்ணமெல்லாம் உங்கமேலே
காதுக் கடுக்கன் வித்தேன்
கை காப்பு ரெண்டு வித்தேன்
மேலூருப் பிள்ளையாலே
மேமுருகு ரெண்டு வித்தேன்
வாழப்பழமும் போச்சே
வச்சிருந்த பணமும் போச்சே
வேசி தல வாசலிலே
வெற்றி வேரா நாமுளச்சேன்
தாசி தல வாசலிலே
தாழம் பூவா நாமுளச்சேன்
தாசி அறிவாளோ-இந்தத்
தாழம்பூ வாசனையை
காதலன் : அவஞ்சி முத்தாலே
அவ குணத்தை நான் மறந்தேன்
தங்க வச்ச பச்சக்கல்லு
தாங்கி வச்ச ஓடாணி
அரக்க வச்ச சுத்துமணி
ஆளை மிரட்டுதடி
வம்பனென்னும் பெயராகி
வயிரி எனும் சொல் கேட்டேன்
வங்கம் கொங்கு தேசம்
மலையாளம் ராப்பயணம்
வாழ வடக்கே வச்சி
வாழ் கரும்பைத் தெக்க வச்சி
ஊரைக் கிழக்க வச்சி
உருகுரண்டி உன்னாலே
ஒத்த மரம் தெரியுதே
உன்னிதமா ஊர் தெரியுதே
படர்ந்த மரம் தெரியுதே
பாசம் உள்ள உன் ஊரு
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம்.
-------------