நீர் விளையாட்டுப் படலம் - 1026
1026.
தொடி உலாம் கமலச் செங் கை.
தூ நகை துவர்த்த செவ் வாய்க்
கொடி உலாம் மருங்குல் நல்லார்
குழாத்து. ஒரு குரிசில் நின்றான்.-
கடி உலம் கமல வேலிக்
கண் அகன் கான யாற்று.
பிடி எலாம் சூழ நின்ற
பெய் மத யானை ஒத்தான்.
தொடி உலாம் கமலச் செங்கை - வளைகள் இயங்குகின்ற தாமரை
போன்ற சிவந்த கைகளையும்; தூநகை துவர்த்த செவ்வாய் - தூய
சிரிப்பையும் மிகச் சிவந்த வாயினையும்; கொடி உலாம் மருங்குல் -
கொடிபோல் நெளியும் இடையினையும் உடைய; நல்லார் குழாத்து -
மகளிர் கூட்டத்திடையே; நின்றான் ஒரு குரிசில் - நின்றவன் ஆகிய
அரசன் ஒருவன்; கடி உலாம் கமல வேலி - மணங்கமழும் தாமரைக்
கொடிகளை வேலியாக உடைய; கண்அகல் கானயாற்று - இடமகன்ற
காட்டாற்றின் (நடுவே); பிடி எலாம் சூழ நின்ற - பெண்யானைகள்
பலவும் (தன்னைச்) சூழ்ந்து நிற்க; மதம் பெய் யானை ஒத்தான் -
மதம் பொழிகின்ற ஓர் ஆண் யானையைப் போன்றிருந்தான்.
நல்லார் குழாத்து நின்றான் ஒரு குரிசில். பிடியெலாம் சூழ நின்ற
மதயானை ஒத்தான் என்று வினை முடிவு செய்க. அப் பெண்டிர்
“நல்லார்” என்பதற்கு. “தொடி உலாம் கமலச் செங்கை. தூநகை.
துவர்த்த செவ்வாய். கொடி உலாம் மருங்குல்” ஆகியவை காரணங்கள்
என்கிறார். நீர்நிலைகாட்டாற்றிற்கும். வளைத்து நிற்கும் மகளிர் பெண்
யானைகட்கும். தனித்து நிற்கும் தலைவன் பெண்யானைகளால்
சூழப்பட்ட ஆண்யானைக்கும் உவமையாயினர். 13
