நகர் நீங்கு படலம் - 1821

இலக்குவன் மறுமொழி ((1821-1822))
1821.
நீண்டான் அது உரைத்தலும்,
நித்திலம் தோன்ற நக்கு,
‘ “சேண்தான் தொடர் மாநிலம்
நின்னது” என்று, உந்தை செப்பப்
பூண்டாய்; “பகையால் இழந்தே,
வனம் போதி” என்றால்,
யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம்
அடுப்பது?’ என்றான்.
நீண்டான் - நெடியோனாய இராமன்; அது உரைத்தலும் - அச்சொற்
கூறுதலும்; நித்திலம் தோன்ற நக்கு - (இலக்குவன்) பற்கள் வெளி்த்
தோன்றச்சிரித்து; ‘சேண்தான் தொடர் மாநிலம் நின்னது’ என்று
உந்தை செப்ப - நெடுந்தூரம்பற்றியுள்ள அகன்ற பெரிய கோசல அரசு
உன்னுடையது என்று உன் தந்தை சொல்ல; பூண்டாய்- சரி என்று
அதனை மேற்கொண்டாய்; பகையால் - பகைவர்களால்;’ இழந்து வனம்
போதி என்றால் - அரசை இழந்து காட்டிற்குச் செல்’ என்று சொன்னால்;
அடியேற்கு- அடியேனுக்கு; சீற்றம் அடுப்பது - கோபம் உண்டாவது;
இனி யாண்டோ’ -இனி எந்த இடத்திலோ;’ என்றான்-
இராமனை வனம் போகச் சொன்ன கோபம் கொண்டு எந்தை
என்னாமல் தயரதனை ‘நுந்தை’என்றான். சொன்ன சொல்லைப் பகையாளர்
பேச்சைக் கேட்டு மாற்றிய இவ்விடத்தில் அல்லவாகோபம் வரவேண்டும்.
வேறு எவ்விடத்தில் இனிக் கோபம் விளைவது? என்றான் இலக்குவன்
என்க. நித்திலம் - முத்து, இங்கே பற்களைக் குறித்தது. 126