நகர் நீங்கு படலம் - 1793

1793.
ஆவும் அழுத; அதன் கன்று
அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள்
அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத;
கால் வயப் போர்
மாவும் அழுத; - அம்
மன்னவனை மானவே.
அம் மன்னவனை மான - (இராமன் பிரிவால் துயர் உறும்)
தசரதனை ஒப்ப; ஆவும்அழுத - பசுக்கள் அழுதன; அதன் கன்று
அழுத - அப் பசுக்களின் கன்றுகள் அழுதன; அன்று அலர்ந்த பூவும்
அழுத - அப்போது மலர்ந்த பூக்களும் அழுதன; புனல் புள் அழுத-
நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத - தேன்
சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத - யானைகள் அழுதன;
கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல
குதிரைகளும் அழுதன.
ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால்
அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார். 98