த்ரியம்பகபுரம்

bookmark

பாடல் 825

தனன தந்தனந் தனதன தனதன 
தனன தந்தனந் தனதன தனதன 
தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான 


உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென 
வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு 
ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி 

உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு 
சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக 
ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே 

விரக வன்புடன் பரிமள மிகவுள 
முழுகி நன்றியொன் றிடமல ரமளியில் 
வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே 

விளைத னங்கவர்ந் திடுபல மனதிய 
ரயல்த னங்களுந் தனதென நினைபவர் 
வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே 

செருதி னைந்திடுஞ் சினவலி யசுரர்க 
ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை 
செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித் 

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு 
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென 
திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங் 

கரையி றந்திடுங் கடலென மருவிய 
வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ 
கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே 

கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய 
கவுரி தந்தகந் தறுமுக எனஇரு 
கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.