குலமுறை கிளத்து படலம் - 733
தசரதனும் அவன் திருக்குமாரர்களும்
தயரதன் மகப்பேற்று வரலாற்றை உரைத்தல்
733.
‘அயன் புதல்வன் தயரதனை
அறியாதார் இல்லை; அவன்
பயந்த குலக் குமரர் இவர்
தமை உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்துக் கரை ஏறல்
நான்முகற்கும் அரிது ஆம்;-பல்
இயம் துவைத்த கடைத் தலையாய்! -
யான் அறிந்தபடி கேளாய்;
பல் இயம்- பல்வேறு வாத்தியங்கள்; துவைத்த - முழங்கக் கூடிய;
கடைத் தலையாய் தலைவாசலையுடைய சனக மன்னனே!; அயன்
புதல்வன் - (முன் சொன்ன) அய மன்னனின் மகனாகிய; தயரதனை
- தசரத மன்னனை; அறியாதார் இல்லை - அறியாதவர்கள் (இந்த
உலகில்) யாரும் இல்லை; அவன் பயந்த - (உலகப் புகழ் வாய்ந்த)
அந்த மாமன்னன் பெற்ற; குலக்குமரர்-
குலத்தின் சிறந்த மைந்தர்களாகிய; இவர்தமக்கு - இவர்களுக்கு;
உள்ள - இருக்கின்ற; பரிசு எல்லாம் - சிறந்த இயல்புகள்
முழுவதையும்; நயந்து உரைத்து- விருப்பத்தோடு சொல்லி; கரை ஏற
- (இவர்களின் புகழ்க் கடலினது) கரையைச் சேர்வதற்கு;
நான்முகற்கும் - பிரமனுக்கும்; அரிது ஆம் - அரியதாகும்; யான்
அறிந்தபடி - (இருப்பினும்) அதை நான் அறிந்தபடி; கேளாய் - சிறிது
சொல்லக் கேட்பாயாக.
நான்கு முகமுடைய பிரமனுக்கும் ஓரளவே உணர்த்தக் கூடிய
இராமலக்குவரது வரலாற்றை ஒரு முகமுடைய மனிதனாகிய என்னால்
எவ்வாறு முழுதும் கூற இயலும்? 13
