குலமுறை கிளத்து படலம் - 733

bookmark

தசரதனும் அவன் திருக்குமாரர்களும்

தயரதன் மகப்பேற்று வரலாற்றை உரைத்தல்
 
733.    

‘அயன் புதல்வன் தயரதனை
   அறியாதார் இல்லை; அவன்
பயந்த குலக் குமரர் இவர்
   தமை உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்துக் கரை ஏறல்
   நான்முகற்கும் அரிது ஆம்;-பல்
இயம் துவைத்த கடைத் தலையாய்! -
   யான் அறிந்தபடி கேளாய்;
 
பல் இயம்- பல்வேறு வாத்தியங்கள்; துவைத்த - முழங்கக்  கூடிய;
கடைத்  தலையாய்   தலைவாசலையுடைய   சனக  மன்னனே!; அயன்
புதல்வன்  - (முன் சொன்ன) அய மன்னனின் மகனாகிய;  தயரதனை
-  தசரத  மன்னனை;  அறியாதார் இல்லை - அறியாதவர்கள் (இந்த
உலகில்)  யாரும்  இல்லை;  அவன் பயந்த - (உலகப் புகழ் வாய்ந்த)
அந்த           மாமன்னன்         பெற்ற;        குலக்குமரர்-
குலத்தின்    சிறந்த   மைந்தர்களாகிய;  இவர்தமக்கு - இவர்களுக்கு;
உள்ள   -  இருக்கின்ற;   பரிசு   எல்லாம்  -  சிறந்த  இயல்புகள்
முழுவதையும்;  நயந்து உரைத்து- விருப்பத்தோடு சொல்லி; கரை ஏற
-    (இவர்களின்    புகழ்க்   கடலினது)    கரையைச்   சேர்வதற்கு;
நான்முகற்கும்  -  பிரமனுக்கும்; அரிது  ஆம் - அரியதாகும்; யான்
அறிந்தபடி - (இருப்பினும்) அதை நான் அறிந்தபடி; கேளாய் - சிறிது
சொல்லக் கேட்பாயாக.

நான்கு     முகமுடைய  பிரமனுக்கும்  ஓரளவே உணர்த்தக் கூடிய
இராமலக்குவரது  வரலாற்றை ஒரு  முகமுடைய  மனிதனாகிய என்னால்
எவ்வாறு முழுதும் கூற இயலும்?                               13