கார்முகப் படலம் - 782
இராமன் வில்லை எடுத்தல்
782.
ஆடக மால் வரை அன்னதுதன்னை.
‘தேட அரு மா மணி. சீதை எனும் பொன்
சூடக வால் வளை. சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது’ என்ன. எடுத்தான்.
மால்ஆடகம் வரை- பெரிய பொன் மலையை; அன்னது தன்னை
- ஒத்தாகிய அச்சிவ வில்லை; தேட அரு - தேடுதற்கரிய; மாமணி -
சிறந்த இரத்திரனம் போன்றவளும்; சீதை எனும் - சீதை
எனுப்படுபவளுமான; பொன்சூடகம் - பொன்னாலாகிய சூடகம் என்ற;
வால்வளை சூட்டிட - கை வளையலையணிந்த நங்கைக்குச் சூட்டும்
பொருட்டு; நீட்டும் - நீட்டுதற்கு உரிய; ஏடு அவிழ்மாலை - மலர்ந்த
பூமாலையே; என்ன - என்று எண்ணுமாறு; எடுத்தான் - எளிதாகத்
தூக்கி எடுத்தான்.
சிவதனுசை இராமன் எடுத்தது சீதையை மணத்தற்குக்
காரணமாவதால் அதைச் சீதைக்குச் சூட்டுதற்காக நீட்டும் மாலை
போலும் என்றார். 33
