கார்முகப் படலம் - 773
773.
‘அன்று முதல். இன்று அளவும்.
ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த
தேர் வேந்தர் திரிந்தும் இலர்;
“என்றும்இனி மணமும்இலை”
என்று இருந்தேம்; இவன் ஏற்றின்.
நன்று; மலர்க் குழல் சீதை
நலம் பழுது ஆகாது’ என்றான்.
அன்று முதல் இன்றளவும்- அன்று முதல் இன்று வரை; ஆரும்-
எந்த அரசனும்; இந்தச் சிலை அருகு - இந்தச் சிவவில்லின்
பக்கத்தில்; சென்றும் இலர் - சென்றதும் இல்லை; போய் ஒளித்த -
ஓடி ஒளிந்து கொண்ட; தேர்வேந்தர் - தேர்வீரரான மன்னவர்;
திரிந்தும் சிலர் - திரும்பி வரவுமில்லை; இனி- இனிமேல்; என்றும் -
(சீதைக்கு) எப்பொழுதும்; மணமும் இல்லை - திருமணம் நிகழாது;
என்று இருந்தேம் - என்று கருதியிருந்தோம்; இவன் ஏற்றின்- இந்த
இராமன் (இச்சிவதனுசை) நாணேற்றினால்; நன்று - நல்லதாகும்;
மலர்க்குழல் சீதை - (அப்போது) மலரணிந்த கூந்தலையுடைய
சீதையின்; நலம் - கன்னிமை அழகும்; பழுது ஆகாது - வீணாகாது;
என்றான் - என்று கூறி முடித்தான்.
இராமன் வில்லை நாணேற்றி வளைத்தால் சீதை இடர்க்கடல்
நீங்கும் என்பது. முன்பு சனகன் கூறியதை இப்பொழுது சதானந்தனும்
கூறி முடித்தான். 24
