கார்முகப் படலம் - 771
771.
‘எம் மன்னன் பெருஞ் சேனை
ஈவதனை மேற்கொண்ட
செம் மன்னர் புகழ் வேட்ட
பொருளேபோல் தேய்ந்ததால்;
பொம்மென்ன வண்டு அலம்பும்
புரி குழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை. தமது
ஆசைபோல் ஆயிற்றால்.
இம் மன்னன்- இந்தச் சனகனது; பெருஞ்சேனை - பெரிய படை;
ஈவதனை மேற்கொண்ட- (இடைவிடாது புரிந்த போரினால்) கொடைத்
தொழிலை மேற்கொண்டுள்ள; செம்மன்னர் - நீதியுள்ள அரசரின்;
புகழ்வேட்ட - புகழையே விரும்பிய; பொருளே போல் - செல்வம்
போல; தேய்ந்தது - வரவரக் குறையலாயிற்று; பொம்மென்ன -
(ஆயினும்) ‘பொம்’ என்னும் ஒலியுண்டாக; வண்டு அலம்பும் -
வண்டுகள் ஒலிக்கப் பெற்றதும்; புரிகுழலை - கடை குழன்றதுமான
கூந்தலையுடைய சீதையை; காதலித்த - விரும்பிய; அம் மன்னர்
சேனை - (பகை) அரசர்களின் சேனை; தமது ஆசை போல் - தமது
ஆசை போல; ஆயிற்று - பெருகிற்று.
வேந்தர் பலர் கூடி இடைவிடாது செய்த போர்களாதலால் தனித்து
நின்ற சனகனது படை சுருங்கியது. பகைவர் சேனைகள் பெருகின
என்பது. 22
