கடிமணப் படலம் - 1288

மண்டபம் பொன் மலையை ஒத்தல்
மண்டபம் மேருமலையாதல்
1288.
மன்னரும். முனிவரும். வானுளோர்களும்.
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்.
துன்னினர் துவன்றலின். சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல்கூடமே.
மன்னரும் முனிவரும் வானுளோர்களும் - அரசர்களும்
முனிவர்களும் வானத்துத் தேவர்களும்; அன்னமென் நடை அணங்கு
அனைய மாதரும் துன்னினர் துவன்றலின் - அன்னப் பறவையென
மெது நடை நடக்கும் தேவ மகளிரை ஒத்த பெண்டிரும் நெருங்கி
நிறைதலால்;அப்பொரு இல் கூடம் சுடர்கள் சூழ்வரும் பொன்மலை
ஒத்தது - ஒப்புவமையில்லாத அத் திருமண மண்டப மானது சூரியன்
முதலிய எல்லாச் சுடர்களும் சூழ்ந்து வலம் வருகின்ற
மேருமலையைப் போன்றதாயிற்று.
சுடர்கள் சுற்றி நிற்பதாலும். பொன் மயமாய்ப் பொலிவதாலும்
மணமண்டபம் பொன்மயமான மேருமலைக்கு நிகர் ஆயிற்று.
மன்னர்கள் முனிவர்கள் சூரியன் ஆயினர்; மாதர்கள் சந்திரன்
ஆயினர்; அவர்கள் சூழ இருப்பதால். சூரிய சந்திரர் ஆகிய இரு
சுடர்கள் சுற்றிவரு மேருகிரியாயிற்று அத்திருமண மண்டபம்
என்பதாம். 44