கடிமணப் படலம் - 1283

bookmark

தயரதன் மணமண்டபம் அடைதல் ((1283-1284))

மணவினை மண்டபத்திற்குத் தயரதன் வருகை
 
(வேறு) கலிவிருந்ததம்
 
1283.    

கரை தெரிவு அரியது. கனகம் வேய்ந்தது.
வரை என உயர்ந்தது. மணியின் செய்தது.
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்.
அரைசர்தம் அரசனும் அணுகல் மேயினான்.
 
கரை  தெரிவு அரியது-   (அகல நீளங்களின்)  எல்லை  தெரியக்
கடினமானதும்;  கனகம்  வேய்ந்தது - பொன் வேயப்பட்டதும்;  வரை
என  உயர்ந்தது  -  மலை  போன்று  உயர்ச்சியுடையதும்; மணியின்
செய்தது - மாணிக்கங்கள் பதிக்கப்பட்டதும்; நிரை வளை மண வினை
நிரப்பு   மண்டபம்   -  வரிசையாக  வளையல்கள்  அணிந்தவளான
சீதையின் திருமண நிகழ்வுகளுக்குரிய  மங்கலப்  பொருள்களை  நிரப்பி
வைத்துள்ளதுமான  அந்த  மண  மண்டபத்தை; அரசர் தம் அரசனும்
அணுகல்   மேயினான்   -  அரசர்க்கரசனாகிய  தசரத   வேந்தனும்
வந்தடைந்தான்.

நிரைவளை  - அன்மொழித் தொகை. சீதையைக் குறித்தது - உயர்வு
நவிற்சியணி.                                               39