எழுச்சிப் படலம் - 892

bookmark

புழுதியின் செயல்

892.

ஆர்த்தது. விசும்பை முட்டி;
   மீண்டு. அகன் திசைகள் எல்லாம்
‘போர்த்தது; அங்கு ஒருவர்தம்மை
   ஒருவர் கட்புலம் கொளாமை
தீர்த்தது; செறிந்தது ஓடி.
   திரை நெடுங் கடலை எல்லாம்
தூர்த்தது. சகரரோடு
   பகைத்தென. - தூளி வெள்ளம்.
 
தூளிவெள்ளம்  -  (சேனையால் எழுப்பப்பட்ட) புழுதிக் கூட்டம்;
ஆர்த்தது  -  நிரம்பியதாய்; விசும்பை முட்டி - வானத்தைத் தாக்கி;
மீண்டு  -  (மேலே  செல்ல  இடம்  இல்லாததால்)  திரும்பி;  அகல்
திசைகள் எங்கும்- அகன்ற திசைகள் எல்லாவற்றையும்; போர்த்தது-
மூடிக் கொண்டது; அங்கு - அத்திசைகளில்; ஒருவர்தம்மை ஒருவர்-
ஒருவரையொருவர்;  கண்  புலம்  கொளாமை - கண்களால் பார்க்க
முடியாதபடி;  தீர்த்தது - செய்து முடித்தது; செறிந்தது ஓடி - (பின்பு
அது)  நெருக்கமாக விரைந்து ஓடி;  சகரரோடு  பகைத்தது  என -
சகரரோடு பகை கொண்டதுபோல; திரை நெடுங் கடலை எல்லாம் -
அலைகளோடு கூடிய கடலையெல்லாம்; தூர்த்தது -  தூர்த்துவிட்டது. 

தூளிவெள்ள     மிகுதியை   விளக்கக்   கடலைத்  தூர்த்ததாகக்
கூறப்பட்டது.    -தொடர்பு    உயர்வு   நவிற்சியணி.   தூர்த்தற்குப்
‘பகைத்தென’    என்று    காரணம்   கற்பித்துக்   கூறியது   ஏதுத்
தற்குறிப்பேற்ற அணி.                                      76