எழுச்சிப் படலம் - 879
கைகேசி செல்லுதல்
879.
பொய்கை அம் கமலக் கானில்
பொலிவது ஓர் அன்னம் என்ன
கைகயர் வேந்தன் பாவை.
கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐ-இருநூறு சூழ்ந்த.
ஆய் மணிச் சிவிகைதன்மேல்.
தெய்வ மங்கையரும். நாண.
தேன் இசை முரல. போனாள்.
பொய்கை - தடாகத்தின்; அம் கமலக் கானில்- (மலர்ந்த) அழகிய
தாமரைக் காட்டிலே;பொலிவது - விளங்குகின்ற; ஓர் அன்னம் என்ன
- அன்னப் பறவை போல; கைகயர் வேந்தன் பாவை - கேகய
அரசனின் மகளாகிய கைகேயி; கணிகையர் ஈட்டம் - பணிப்
பெண்களின் கூட்டம்; பொங்கி ஐ இரு நூறு சூழ - எழுச்சியோடு
ஆயிரவர் தன்னைச் சூழ்ந்து வர; தெய்வ மங்கையரும் நாண -
தெய்வப் பெண்களும் (தன் சிறப்பைக் கண்டு) வெட்கம் அடையவும்;
தேன் இசை முரல - வண்டுகள் இசையோடு பாடவும்; ஆய்மணி -
ஆராய்ந்து பதிக்கப்பட்ட மணிகளால் செய்யப் பெற்ற; சிவிகைதன்
மேல் - பல்லக்கிலே; போனாள் - சென்றாள்.
கணிகையர் சூழச் செல்லும் கைகேயிக்குக் கமலத் தடாகத்தில்
பொலியும் அன்னம் உவமையாயிற்று. 63
