எழுச்சிப் படலம் - 858
அந்தணர் மிதிலைக்குச் செல்லுதல்
அந்தணர் முற்பட்டுச் செல்லுகை
858.
குடையர். குண்டிகை தூக்கினர். குந்திய
நடையர். நாசி புதைத்த கை நாற்றலர்.--
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய. அந்தணர் - முந்தினார்.
கட களிற்றையும் - மத யானையையும்; காரிகையாரையும் -
மகளிரையும்; அடைய - பக்கத்தில் செல்ல; அஞ்சிய அந்தணர் -
அச்சம் கொண்டுள்ள அந்தணர்; குடையர் - குடை பிடித்தவர்களும்;
குந்திய நடையர் - குதிகால் தரையில் படாமல் உந்திச்
செல்பவர்களும்; குண்டிகை தூக்கினர் - கமண்டலத்தை
ஏந்தியவர்களும்; நாசி புதைத்த கை - மூக்கை மூடிய கையை;
நாற்றலார் - எடுக்காதவர்களுமாகிய; முந்தினார் - முற்பட்டுச்
சென்றார்கள்.
குந்திய நடையினர்: தம் நடையால் எவ்வுயிர்க்கும் தீங்கு வராதபடி
பாதத்தால் உந்தி நடக்கும் நடையை உடையவர். நாசி புதைத்த கை -
பிராணாயாமம் செய்யும் வலக்கையைக் கீழே தொங்கவிடமாட்டார்கள்.
மாதரை நெருங்கினால் ஈட்டிய தவமும். புண்ணியப் பயனும்.
உயிரினும். மேலான ஒழுக்கமும் அழியும். அதனால் அவர்கள்
நெருங்க அஞ்சினர். 42
