எழுச்சிப் படலம் - 842
பிரிந்த காதலன் பேதுறுதல்
ஓர் ஆடவன் நிலை
842.
பிள்ளை மான் நோக்கியைப் பிரிந்து போகின்றான்.
அள்ளல் நீர் மருத வைப்புஅதனில். அன்னம்ஆம்
புள்ளும் மென் தாமரைப் பூவும் நோக்கினான்.
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான்.
பிள்ளை மான் நோக்கியை- இளைய மான் போன்ற கண்களைக்
கொண்ட காதலியைப்; பிரிந்து போகின்றான் - பிரிந்து செல்லுகின்ற
ஓர் ஆடவன்; அள்ளல்நீர் - சேரும் நீரும் நிறைந்த; மருத வைப்பு
அதனில் - மருத நிலத்தில் (வயல்); அன்னமாம் புள்ளும் - அன்னப்
பறவையையும்; மென்தாமரைப் பூவும் - மெல்லிய
தாமரைமலர்களையும்; நோக்கினான் - பார்த்து (தன் மனைவியின்
நடையும். அடிகளும் நினைவுக்குவர) ; உள்ளமும் தானும் - மனமும்
தானுமாக; நின்று - தனியாக நின்று; ஊசல் ஆடினான்;- ஊஞ்சல்
போலத் தடுமாறினான்.
தாமரைப் பூவையும் அன்னத்தையும் ஓர் ஆடவன் வயலிலே
கண்டதும் தன் மனைவியின் அடிகளும். நடையழகும் நினைவிற்கு
வந்தன என்பது. அவளை அவன் பிரிந்தமையால் அவற்றைக்
காணமுடியவில்லையே என்று வருந்தினான். 26
