எழுச்சிப் படலம் - 839
முன்சேனை மிதிலையை அடைதல்
படைப் பெருக்கம்
839.
உழுந்து இட இடம் இலை
உலகம் எங்கணும்.
அழுந்திய உயிர்க்கு எலாம்
அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப்
படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில்
மிதிலை கூடிற்றே!
அழுந்திய உயிர்க்கு எலாம் - (துன்பத்தில்) ஆழ்ந்துள்ள
உயிர்களுக்கு எல்லாம்; அருட் கொம்பு ஆயினான் - அருள் புரியும்
கொழு கொழும்பான தசரதன்; எழுந்திலன் - (இன்னும் அயோத்தியை
விட்டு) எழுந்து புறப்படவில்லை; உலகம் எங்கணும் - (அப்படி
இருக்கையில்) உலகத்தில் எங்கும்; உழுந்திட இடம் இலை - ஓர்
உழுந்துகூடப்போட இடமில்லை (என்று சொல்லும்படி); எழுந்து -
(அயோத்தியிலிருந்து) புறப்பட்டு; இடை - (அயோத்தி - மிதிலை)
இடையிலே; படரும் - செல்லுகின்ற; சேனையின் கொழுந்து -
படையின் முன்னணி; போய் - சென்று; கொடிமதில் மிதிலை-
கொடிகள் அசையும் மதில் சூழ்ந்த மிதிலை நகரை; கூடிற்று -
அடைந்தது.
புறப்படத் தொடங்கிய தசரதனது முன்னணிச் சேனை மிதிலை
நகரை அடைந்தது. உயர்வு நவிற்சியணி.
சேனை முழுவதும் ஒரே காலத்தில் எழுந்தால் அயோத்தியிலிருந்து
மிதிலை வரையிலும் நின்றாலும் நிற்க இடம் போதாது என்றார்.
உழுந்திட இடமிலை என்றது சேனையின் நெருக்கம் கூறியது.
சேனையின் கொழுந்து - முன்சேனை. 23
