உயிர் வருக்கம்
அறம் செய விரும்பு
அறம் – (விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது) செய – செய்வதற்கு,
விரும்பு – நீ ஆசைப்படு.
- தருமம் செய்ய நீ விரும்புவாயாக
- நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.
ஆறுவது சினம்
ஆறுவது- தவிர்க்க வேண்டியது,
சினம் - கோபம்.
- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
- கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல.
இயல்வது கரவேல்
இயல்வது - நம்மால் முடிந்ததைக் கொடுப்பதற்கு
கரவேல் - வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
ஈவது விலக்கேல்
ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
விலக்கேல் - நீ தடுக்காதே
- ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
உடையது விளம்பேல்
உடையது - உனக்கு உள்ள பொருளை
விளம்பேல் - நீ பிறர் அறியும்படி சொல்லாதே
- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.
- உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.
- உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.
ஊக்கமது கைவிடேல்
ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியைக்
கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.
- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
எண் எழுத்து இகழேல்
எண் – கணித நூலையும்
எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்
- எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.
- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
ஐயம் இட்டு உண்
ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து
உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.
- யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.
ஒப்புரவு ஒழுகு
ஒப்புரவு – உலக போக்கிற்கு ஏற்றவாறு;
ஒழுகு – நட
- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
ஓதுவதை ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.
