உயிர் வருக்கம்

உயிர் வருக்கம்

bookmark

அறம் செய விரும்பு

அறம் – (விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது) செய – செய்வதற்கு,

விரும்பு – நீ ஆசைப்படு.

  • தருமம் செய்ய நீ விரும்புவாயாக
  • நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

ஆறுவது சினம்

ஆறுவது- தவிர்க்க வேண்டியது,

சினம் - கோபம்.

  • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
  • கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல.

இயல்வது கரவேல்

இயல்வது - நம்மால் முடிந்ததைக் கொடுப்பதற்கு

கரவேல் -  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

  • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

 ஈவது விலக்கேல்

ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை

விலக்கேல் - நீ தடுக்காதே

  • ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

உடையது விளம்பேல்

உடையது - உனக்கு உள்ள பொருளை

விளம்பேல் - நீ பிறர் அறியும்படி  சொல்லாதே

  • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.
  • உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.
  • உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியைக்

கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.

  • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

எண் எழுத்து இகழேல்

எண் – கணித நூலையும்

எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்

  • எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.

  • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

ஐயம் இட்டு உண்

ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து

உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.

  • யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.

 ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு – உலக போக்கிற்கு ஏற்றவாறு;

ஒழுகு – நட

  • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

ஓதுவதை ஒழியேல்


நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.


ஔவியம் பேசேல்


ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.


அஃகஞ் சுருக்கேல்


அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.