நகர் நீங்கு படலம் - 1773

1773.
‘மைந்தன் வரவே நோக்கும்,
வள மாதவன் பால், மகனோடு
அம் தண் புனல் கொண்டு அணுக,
“ஐயா, இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய்; என்னோ
வந்தது? என்றே, நொந்தேம்;
சந்தம் கமழும் தோளாய்,
தழுவிக் கொள வா" எனவே.
‘மைந்தன் வரவே நோக்கும் - மகனது வருகையையே எதிர்
பார்த்துக்கொண்டிருக்கின்ற; வள மாதவன்பால் - மிக்க தவத்தை உடைய
முனிவனிடம்; மகனோடு - (இறந்த) மகனோடு; அம் தண்புனல் கொண்டு
அணுக - அழகிய குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு நெருங்கிச் செல்ல;
‘ஐயா! - மகனே; இது போது அளவாய் -இவ்வளவு நேரமாய்; வந்து
இங்கு அணுகாய் - இங்கு வந்து சேராமையால்; என்னோ வந்தது? -
உனக்கு என்ன நேர்ந்ததோ; என்றே - என்று நினைத்து; நொந்தேம்-
வருந்தினோம்; சந்தம் கமழும் தோளாய்! - சந்தனம் மணக்கின்ற
தோளைஉடைய மகனே; தழுவிக் கொள வா’ - நாங்கள் தழுவிக்
கொள்ளும்படி (அருகில்) வா; என - என்று சொல்லி.
தசரதன் இறந்த மகன் உடலை எடுத்துக்கொண்டு தண்ணீருடன் கண்
இழந்த முனி தம்பதிகளைஅணுக, அவர்கள் தம் மகன் வந்ததாகவே
கருதினர் என்பது இதனால் விளங்கும். ‘ஏ’ ஈற்றசை. 79