நகர் நீங்கு படலம் - 1796

1796.
‘‘மண் செய்த பாவம் உளது’
என்பார்; ‘மா மலர்மேல்
பெண் செய்த பாவம் அதனின்
பெரிது ’ என்பார்;
‘புண் செய்த நெஞ்சை, விதி’
என்பார்; ‘ பூதலத்தோர்
கண் செய்த பாவம்
கடலின் பெரிது ’ என்பார்.
(நகரமாந்தர்) ‘மண்செய்தபாவம் உளது’ என்பார் - ‘நிலமகள்
செய்த தீவினை மிகுதியாக உள்ளது’ என்பர்; ‘மாமலர் மேல் பெண்
செய்த பாவம் அதனின் பெரிது’- சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும்
திருமகள் செய்த தீவினை அதைக்காட்டிலும் மிகுதி; ’என்பார்-; ‘புண்
செய்த நெஞ்சை விதி - புண்பட்ட மனத்தைப் பார்த்து இது விதியால்
விளைந்தது;’ என்பார்- ; பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின்
பெரிது’ - இப்பூமியில் உள்ளவர்களின் கண் செய்த தீவினை
கடலைக்காட்டிலும் மிகுதி;’ என்பார்- .
இராமனால் ஆளப்பெறாமையால் பூமியும், அனுபவிக்கப்
பெறாமையால் செல்வமகளும் பாவம் செய்தவர் ஆயினர். மணி முடி
தரித்துச் செல்லும் காட்சியைக் காணவேண்டிய கண்கள் மரவுரி தரித்துக்
காடு செல்லும் காட்சியைக் காண நேரிட்டமையின் கண் செய்த பாவம்
மிகுதியாம். 101