பட்டாலியூர்

bookmark

பாடல் 939
தனதன தனனத் தான தானன 
தனதன தனனத் தான தானன 
தனதன தனனத் தான தானன ...... தனதான 


இருகுழை யிடறிக் காது மோதுவ 
பரிமள நளினத் தோடு சீறுவ 
இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர 

எமபடர் படைகெட் டோட நாடுவ 
அமுதுடன் விடமொத் தாளை யீருவ 
ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும் 

உருகிட விரகிற் பார்வை மேவுவ 
பொருளது திருடற் காசை கூறுவ 
யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல் 

உயிர்வதை நயனக் காதல் மாதர்கள் 
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை 
உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே 

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய 
மரகத கிரணப் பீலி மாமயில் 
முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே 

முரண்முடி யிரணச் சூலி மாலினி 
சரணெனு மவர்பற் றான சாதகி 
முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம் 

பருகினர் பரமப் போக மோகினி 
அரகர வெனும்வித் தாரி யாமளி 
பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும் 

பறையறை சுடலைக் கோயில் நாயகி 
இறையோடு மிடமிட் டாடு காரணி 
பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே. 
பாடல் 940 
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன 
தத்தான தனன தனதன ...... தனதான 


கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல 
கற்பூர களப மணிவன ...... மணிசேரக் 

கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன 
கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர் 

கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு 
கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே 

கொக்காக நரைகள் வருமன மிக்காய விளமை யுடன்முயல் 
குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ 

அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி 
லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா 

அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ 
டக்காகி விரக பரிபவ ...... மறவேபார் 

பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு 
பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா 

பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு 
பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே. 
பாடல் 941 
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன 
தந்தத்தத் தான தனதன ...... தனதான 


சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள் 
சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச் 

சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர் 
சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின் 

மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி 
வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின் 

மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம் 
வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே 

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே 

வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில் 
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர் 
கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக் 

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ 
கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.