நகர் நீங்கு படலம் - 1794

1794.
ஞானீயும் உய்கலான்
என்னாதே, நாயகனைக்
‘கான் ஈயும் ’ என்று உரைத்த
கைகேசியும், கொடிய
கூனீயும் அல்லால்,
கொடியார் பிறர் உளரோ? -
மேனீயும் இன்றி,
வெறு நீரே ஆயினார்.
‘ஞானீயும்உய்கலான்’என்னாதே - உலகில் பிறந்தார்க்குப் பிரிவும்
சிறப்பும் இயல்பானவை என்பதைத் தெளிய உணர்ந்த ஞானியும்கூட இராமன்
பிரிவால் பிழைக்க மாட்டான் என்று கருதாமல்; நாயகனைக்‘கான் ஈயும்’
என்று உரைத்த கைகேசியும் - தன் கணவனைப் பார்த்து (இராமனுக்குக்)
காட்டைக் கொடும் என்று சொல்லிய கைகேயியும்; கொடியகூனீயும்
அல்லால் - அவளுக்குத் துர்ப்போதனை செய்த கூனியும் தவிர; பிறர்
கொடியார் உளரோ? - வேறு யாரேனும் மிகக் கொடியவர்கள்
இருக்கின்றார்களோ (மற்றவர்கள் அனைவரும்); மேனீயும் இன்றி -
உடம்பும் இல்லாமல்; வெறுநீரே ஆயினார் - வெறுமைத் தன்மை
அடைந்தவர் ஆயினர்.
‘கான் ஈயும்’ என்பதற்கு ஏற்ப, ஞானி, கூனி, மேனி என்ற
இகரங்கள் நீண்டன எதுகை நயம் பற்றி. ‘ஞானியே உய்கலான்’ என்றால்
மற்றவர் நிலை சொல்லவேண்டுவதில்லை என்றபடி.