நகர் நீங்கு படலம் - 1754

1754.
‘எற்றே பகர்வேன், இனி, யான்?
என்னே! உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும்,
வானே வருந்தாது எனினும்,
பொன் - தேர் அரசே! தமியேன்
புகழே! உயிரே! உன்னைப்
பெற்றேன்; அருமை அறிவேன்;
பிழையேன்! பிழையேன்!' என்றான்.
உன்னின் பிரியவற்றே உலகம் எனினும் - (இராமா!)
உன்னிடத்திருந்து உலகம் பிரியும் வல்லமை உடையதாயினும்; வானே
வருந்தாது எனினும் - தேவர்களும் மனம்வருந்தார் ஆனாலும்;
பொன்தேர் அரசே! - பொன் மயமான தேரில் ஏறி வரும் அரசனே;
தமியேன் புகழே! - துணையில்லாத எனது புகழே; உயிரே! - என்
உயிரே; உன்னைப் பெற்றேன், அருமை அறிவேன் - உன்னைப் பெற்று
உன் அருமையை அறிந்துள்ளேன்; இனி யான் எற்றே பகர்வேன்- இனி
மேல் நான் என்ன சொல்லுவேன்; என்னே-; பிழையேன் பிழையேன் -
பிழைக்க மாட்டேன்; என்றான்-
வானும் உலகமும் உன் பிரிவை ஏற்கும் வல்லமை உடையதாயினும்
என்னால் அது இயலாதுஎன்றான். ‘பிழையேன், பிழையேன்' புலம்பலில்
வந்த அடுக்கு. 60