கடிமணப் படலம் - 1285

bookmark

முரசம் முதலியன ஆர்த்தல்

1285.    

மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை. பேரிகை.
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை.
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே.
 
மங்கல     முரசு இனம் மழையின் ஆர்த்தன  - (அப்பொழுது)
மங்களகரமான   மண   முரசுகளின்   கூட்டம்   மழை   மேகங்களின்
ஒலியைப்  போல் முழங்கின; சங்குகள் முரன்றன - (மங்கலச்)  சங்கின்
கூட்டங்களும்   ஒலித்தன;    தாரை.    பேரிகை   பொங்கின  -
தாரையென்னும்  ஊது  குழலும்.   பேரிகையென்னும்  தோற்  கருவியும்
மிக்கொலித்தன;  மறையவர் புகலும்  நான்மறை  -  வேதம் வல்லார்
ஒலிக்கின்ற நான்கு வேதங்களின் ஒலி; கங்குலின் ஒலிக்கும் மாகடலும்
போன்றதே  -  இரவுப்  பொழுதில்  மிக்கு ஒலிக்கும் பெருங்  கடலின்
ஓசையை ஒத்தது ஆயிற்று.  

ஒலிகளை அடுக்கிக்  கூறி. மணக்காட்சியைக் கற்பார் மனக்கண் முன்
கொண்டுவருகிறார் கவிஞர்.                                   41