திருவெண்ணி - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

591

தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்

தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்

பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்

வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.1

592

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்

நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்

பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.2

593

கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்

கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்

பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த

திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.3

594

சடையேறு புனல்வைத்த சதுர னாருந்

தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி

உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த

மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.4

595

மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி

மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்

பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்

கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.5

596

வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்

வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்

குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்

ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.6

597

மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி

மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்

சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த

காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.7

598

செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்

திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்

ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி

மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.8

599

வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்

வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்

கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்

உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.9

600

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்

புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்

குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்

திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்,
தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்