திருக்கொச்சைவயம்

bookmark

பண் - பியந்தைக்காந்தாரம்

898    

நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
  நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
  திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
  விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
  கொடியாடு கொச்சை வயமே.    

01

899    

விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
  விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
  தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து
  கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
  வளர்கின்ற கொச்சை வயமே.    

02

900    

படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
  களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
  இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
  நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
  மறையோது கொச்சை வயமே.    

03

901    

எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
  முயல்வுற்ற சிந்தை முடுகி
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
  பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
  வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
  வளர்கின்ற கொச்சை வயமே.    

04

902    

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
  னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
  இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
  வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
  நிறைகின்ற கொச்சை வயமே.    

05

903    

புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
  வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
  நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
  யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
  வரைமேவு கொச்சை வயமே.    

06

(இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று).    

07

904    

மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
  முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
  டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
  விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
  அடிதேடு கொச்சை வயமே.    

08

905    

வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
  முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
  அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
  விரைதேரப் போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
  வயல்மேவு கொச்சை வயமே.    

09

906    

கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
  இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
  விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
  குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
  மணநாறு கொச்சை வயமே.    

10

907    

இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
  உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
  இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
  தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
  அழகா இருப்ப தறிவே.    

11

திருச்சிற்றம்பலம்