திருவாரூர்

bookmark

பண் - காந்தாரம்

855    

கவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
  பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
  போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
  தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

01

856    

தந்தையார் போயினார் தாயரும்
  போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
  பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம்
  வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

02

857    

நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
  ஆக்கைதான் நிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றம்நீங்
  காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
  வைகலும் மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

03

858    

நீதியால் வாழ்கிலை நாள்செலா
  நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளும்நாள்
  இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும்
  வருணனும் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

04

859    

பிறவியால் வருவன கேடுள
  ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங்
  காதெனத் தூங்கி னாயே
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
  தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

05

860    

செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
  தேரையாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற
  லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்
  தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

06

861    

ஏறுமால் யானையே சிவிகையந்
  தளகமீச் சேர்ப்பி வட்டில்
மாறிவா ழுடம்பினார் படுவதோர்
  நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
  பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

07

862    

என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
  சுவரெறிந் திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
  லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
  குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

08

863    

தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
  புத்திரர் தார மென்னும்
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்
  கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
  சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

09

864    

நெடியமால் பிரமனும் நீண்டுமண்
  ணிடந்தின்னம் நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார்
  பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
  மணியணி கண்டத் தெண்டோ ள்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
  மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.    

10

865    

பல்லிதழ் மாதவி அல்லிவண்
  டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
  ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடுமெம்
  மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார்
  ஓதநீர் வைய கத்தே.    

11

திருச்சிற்றம்பலம்