கை சோர்ந்து நிக்கறனே

அவளும் ஒரு காலத்தில் ஒரு குறையுமில்லாமல் கணவனுடன் வாழ்க்கை நடத்தினாள். செல்வச் செழிப்புடன் விளங்கியது அவள் குடும்பம். ஆனால் போகிற காலத்தில் பூட்டி வைத்தாலும் போய் விடும் தன்மையுள்ளதல்லவா செல்வம்? “இன்று ஒருவனிடம் நாளை ஒருவனிடம் என்று இருக்கும் செல்வந்தான் என்னை விட்டுப் போய் விட்டது என்றிருந்தேன். ஆனால் நிலையானது என்று நான் எண்ணிய என் கணவனும் என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டுமா? நான் முன்னம் இருந்த நிலையை எண்ணி ஏங்க வேண்டுமா? ” என்று முகம் சோர்ந்து மனம் சோர்ந்து அழுகிறாள்.
கல்லு துரிஞ்சி மரம்
கல்கண்டு காய்க்கும் மரம்
கல்கண்டு தின்னப்பொண்ணு-நான்
கைசோர்ந்து நிக்கறனே
முள்ளு துரிஞ்சி மரம்
முட்டாயி காய்க்கும் மரம்
முட்டாயி தின்னப்பொண்ணு-நான்
முகஞ்சோந்து நிக்கிறனே
வட்டார வழக்கு: சோந்து-சோர்ந்து
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------------