கடிமணப் படலம் - 1256

கவிக்கூற்று
இரவில் இராமனது எண்ண அலைகள்
1256.
என. இன்னன பன்னி. இருந்து உளைவாள்.
துனி உன்னி. நலம்கொடு சோர்வுறுகால்.
மனை தன்னில். வயங்குறும் வைகு இருள்வாய்.
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்;
என இன்னன பன்னி இருந்து உளைவாள் - என்று இவ்வாறான
வார்த்தைகளைப் பலமுறையும் சொல்லிச் சொல்லி வருந்துபவளாய்;
துனி உன்னி. நலம் கொடு சோர்வுறுகால் - (தனக்கு வந்த)
துன்பங்களை நினைந்து நினைந்து (பெண்மைக்குரிய நாண் முதலிய)
குணங்களையும் விட இயலாமல் பற்றிக் கொண்டு (பிராட்டி)
தளர்வுறுகின்ற அந்த இரவுப் பொழுதில்; மனைதன்னில் வயங்குறும்
வைகு இருள் வாய் - (தனக்கு ஒதுக்கியுள்ள) திருமாளிகையிலே.
இருள்மிகும் இரவுப்பொழுதிலே; அனகன் நினைகின்றன யாம்
அறைவாம் - குறை கலவாத இராமபிரான் (மனத்தே) நினைவாய்
நிகழ்கின்றனவற்றை (இனி) யாம் உரைப்போம்.
கவிக்கூற்று. அனகம்: குற்றம். குறை: பாவம். 12