இந்திரசித்து வதைப் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இந்திரசித்து வதைப் படலம்
இராவணன் இந்திரசித்திடம், நிகழ்ந்தது உரைக்கக் கூறல்
கண்ணிடைக் கலக்க நோக்கி, ஐயுறவு உழக்கும் காலை,
புண்ணிடை யாக்கைச் செந்நீர் இழிதர, புக்கு நின்ற
எண்ணிடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான்:
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி என்றான்.
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில் தொடங்கி, ஆர்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்துவிட்டான்.
வலம் செய்து போயிற்றுஎன்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்;
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே.
விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்.
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் - உலகு எலாம் கலக்கி வென்றான்.
இராவணன் இந்திரசித்தைக் கடிந்துரைத்தல்
புயங்களும் குலுங்க நக்கு, போர்க்கு இனி ஒழி, நீ; போத
மயங்கினை, மனமும்; அஞ்சி வருந்தினை; வருந்தல் ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிதரைத் தனு ஒன்றாலே.
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்று அவர்ப் பெயர்வர் என்றும்,
உன்னை, "நீ அவரை வென்று தருதி" என்று உணர்ந்தும், அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் கொண்டேன்.
காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ , இருபது திரள் தோள் உண்டால்?
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ ?
கட்டுவது அல்லால், என்னை யான் எனக் கருதுவாரோ?
"பட்டனென்" என்ற போதும், எளிமையின் படுகிலேன் யான்,
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன்.
புல்லிய பகழி வாங்கி, போர்த் தொழில் சிரமம் போக்கி,
எல்லியும் கழித்தி என்னா, எழுந்தனன்; எழுந்து, பேழ் வாய்
வல்லியம் முனிந்தாலன்னான், வருக, தேர் தருக! என்றான்.
இராவணனை தடுத்து, இந்திரசித்து தேர் ஏறிப் போர்க்குச் செல்லுதல்
ஒழிந்தருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான் போய்க்
கழிந்தனென் என்ற பின்னர், நல்லவா காண்டி என்னா
மொழிந்து, தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான்.
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன, தேர்மேல் ஆக்கி,
கொடைத் தொழில் வேட்டோ ர்க்கு எல்லாம் கொடுத்தனன், கொடியோன் தன்னைக்
கடைக்கணால் நோக்கி நோக்கி, இரு கண் நீர் கலுழப் போனான்.
இந்திரசித்து தம்மைத் தொடர்ந்த இலங்கையின் நிருதரை விலக்கி, மன்னனைக் காக்குமாறு கூறிச் செல்லுதல்
விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம்; விளிதும் என்று,
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை, மன்னனைக் காமின்; யாதும்
கலங்கலிர்; இன்றே சென்று, மனிதரைக் கடப்பென் என்றான்.
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார், வெருவலுற்றக்
கணங் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து, அரிதின் போனான்.
இந்திரசித்தின் தேர் ஓசையை இலக்குவன் கேட்டல்
சேய் இரு விசும்பை நோக்கி, வீடண! தீயோன் அப் பால்
போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும் என்பான்,
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான்.
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது, புனை மணியின்
மின் திரள் சுடரது, கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய, - திரி புவனமும் உறு தனி இரதம்.
குடர் மறுகிட, மலை குலைய, நிலம் குழியொடு கிழிபட, வழி படரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும், இருள் உளது என எழும் இகல் அரவின்
படம் மறுகிட, எதிர் விரவியது - அவ் இருள் பகல் உற வரு பகை இரதம்.
இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல்
வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்; விடு கணை சிதறினன், அடு தொழிலோன்;
தீர்த்தனும், அவன் எதிர் முடுகி, நெடுந் திசை செவிடு எறிதர, விசை கெழு திண்
போர்த் தொழில் புரிதலும், உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால்.
இந்திரசித்தை உடனே கொல்லுமாறு வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்
சூடலை, துறு மலர் வாகை எனத் தொழுதனன்; அ(வ்) அளவில் அழகனும் அக்
கோடு அணை வரி சிலை உலகு உலைய, குல வரை பிதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால்.
இருவரும் பொருதல்
தீயினும் எரிவன உயிர் பருக, சிதறின கவிகளொடு இன நிருதர்,
போயின போயின திசை நிறையப் புரள்பவர் முடிவு இலர்; பொரு திறலோர்
ஏயினர், ஒருவரை ஒருவர் குறித்து, எரி கணை, இரு மழை பொழிவனபோல்.
கொற்றவன் விடு கணை முடுகி, அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில; தெறுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய, நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால்.
தூயினன், அயில் முக விசிகம்; நெடுந் துளைபட, விழி கனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன; அது தெரிவுறலால், உரறினர் இமையவர், உவகையினால்.
செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளி பட வருவது கண்டு, இளையவன் எழு வகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால், நடு இரு துணிபட உரறினனால்.
சோணிதம் நிலம் உற, உலறிடவும், தொடு கணை விடுவன மிடல் கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன் மருமகன், அடு கணையின்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட, முறை முறை சிதறினனால்.
இந்திரசித்தின் தேர்ப்பாகனை இலக்குவன் வீழ்த்தல்
போர் உறு புரவிகள் படுகிலவால்; புனை பிணி துணிகில, பொரு கணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை எனத் தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந் தரையிடை இடுதலும், முறை திரிய,
ஐவினை நலிய, நைவான் அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலாப்
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது - அப் பொலம் பொன் திண் தேர்.
தேரைத் தானே செலுத்தி, தன் மேல் தைத்த அம்புகளைப் பறித்து, இந்திரசித்து வீசுதல்
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல், அனுமன் தன்மேல், மற்றையோர் மல் திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன், எவரும் உட்க.
இந்திரசித்தின் வீரம் கண்டு, தேவரும் இலக்குவனும் வியத்தலும்
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற்பாலார், துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர் என்று அமரர் பேசி, சிந்தினார், தெய்வப் பொற் பூ.
கை தடுமாறாது; உள்ளம் உயிர் இனம் கலங்கா; யாக்கை
மொய்கணை கோடி கோடி மொய்க்கவும், இளைப்பு ஒன்று இல்லான்;
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் என்றான்.
இந்திரசித்து பகலில் அன்றி இரவில் இறவான் என வீடணன் இலக்குவனுக்கு மொழிதல்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்
காரினைக் கடந்து, வஞ்சம் கருதினும் கருதும்; காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன்.
இப்பொழுதே வெல்வேன் என இலக்குவன் உரைத்தபோது, சூரியனும் உதித்தது
பொன்றுவது அல்லால், அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தெறு கணை; வலியின் தீர்ந்தான்;
வென்றி இப்போதே கோடும்; காண் என விளம்பும் எல்லை.
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்,
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கின்றான் ஒத்து, உதித்தனன், அருக்கன் உப்பால்.
இடுஞ் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய,
கொடுஞ் சின மாயச் செய்கை வலியொடும் குறைந்து குன்ற,
முடிந்தனன், அரக்கன் என்னா, முழங்கினர், உம்பர் முற்றும்.
சிவன் ஈந்த தேரும் சிலையும் இருக்கும்வரை இவன் அழியான் என வீடணன் குறிப்பித்தல்
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் - தோள்
வீர! இது ஆணை என்றான் - வீடணன், விளைவது ஓர்வான்.
இலக்குவன் இந்திரசித்தின் தேரைச் சிதைக்க, அவன் விண்ணில் மறைந்து ஆரவாரித்தல்
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி.
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல் ஆய அன்றே-
திணி நெடு மரம் ஒன்று, ஆழி வாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல,
பொழிந்தனன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க,
மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான், உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார்.
வர பலத்தால் இந்திரசித்து கல் மழை பொழிய, திசைகள் எங்கும் இலக்குவன் வாளி ஏவுதல்
கல்லின் மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியும்காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள் சிந்தப்
புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார்.
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ,
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல்.
இந்திரசித்தின் வில் பிடித்த கையை இலக்குவன் துணித்து வீழ்த்துதல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைவது ஆனான்:
மலை அறாது ஒழியாது என்னா, வரி சிலை ஒன்று வாங்கி,
கலை அறாத் திங்கள் அன்ன வாளியால், கையைக் கொய்தான்,-
விலை அறா மணிப் பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ.
வேக வான் கொடுங் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்,-
மாக வான் தடக் கை மண்மேல் விழுந்தது மணிப் பூண் மின்ன-
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன.
கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ் சிலையினோடும், பேர் எழில் வீரன் பொன் - தோள்
துடித்தது, - மரமும், கல்லும் துகள் பட, குரங்கும் துஞ்ச.
சந்திரன் வீழா, மேரு மால் வரை தகர்ந்து வீழா,
இந்திரசித்தின் பொன் - தோள் இற்று இடைவிழுந்தது என்றால்,
எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்? என்றார்.
கை அற்றமை கண்டு அரக்கர் கலங்க, வானரர் அரக்கர்களை மாய்த்தல்
பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த
மை அறக் கரிது என்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன,
கை அற, தலை அற்றார்போல் கலங்கினார், நிருதர் கண்டார்.
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால்; மரங்களால், மானக் குன்றால்,
பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக் குடி ஏற்றிற்று அன்றே.
இந்திரசித்து வீரம் பேசி, உக்கிரமாகப் பொருதல்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான், பகையின் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான்.
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, இனி, தலை துணிக்கும் காலம்
ஏற்றது என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான்.
இலக்குவன் பிறை முக அம்பு எய்து, இந்திரசித்தின் தலையை அறுத்தல்
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்திஎன்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி என்று, ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் - உலகு எலாம் நிறுத்தி நின்றான்.
நாம வேல்தானும், மற்றை நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,
பூ மழை வானோர் சிந்த, பொலிந்தது - அப் பகழிப் புத்தேள்.
இந்திரசித்து இறந்து மண்மேல் விழ, அரக்கர் சேனை இரிந்து ஓடுதல்
பற்றிய குலத்தோடும், உடல் நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றால், மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்தென்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை.
குண்டலத் துணைகளோடும், கொந்தளக் குஞ்சிச் செங் கேழ்ச்
சண்ட வெங் கதிரின் கற்றைத் தழையொடும், இரவிதான் அம்
மண்டலம் வீழ்ந்தது என்ன, வீழ்ந்தது, தலையும் மண்மேல்.
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமாபோல்,
அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார்.
தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்
செல்லாது, அவ் இலங்கை வேந்தற்கு அரசு எனக் களித்த தேவர்
எல்லாரும், தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார் தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்.
வானவர் அருளால் வானரர் உயிர் பெற்று எழுதல்
புரந்தரன், முதல்வர் ஆய நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர்; அவரை யாக்கை கண்டன, குரங்கும், கண்ணால்.
சிறந்தது - சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலை அதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த.
இந்திரசித்தின் தலையை ஏந்தி, அங்கதன் முன் செல்ல, அனுமனின் தோள்மேல் இலக்குவன் செல்லுதல்
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன் மேல் இளவல் போனான்.
இந்திரனின் உவகை மொழி
ஓங்கிய முடியன், திங்கள் ஒளி பெறு முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப் போய் வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகையாளன், இந்திரன், உரைப்பதானான்:
புல்லிய வடுவும் போகாது" என்று அகம் புலம்புகின்றேன்,
வில்லியர் ஒருவர் நல்க, துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனி, சிறுமை யாதோ
வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த் தொழில் கடந்த வெய்யோன்,
தன் தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்; இனிக் குடை எடுப்பென் என்றான்.
இலக்குவன் மீண்டு வருதல் கண்டு, இராமன் உவகைக் கண்ணீர் சொரிதல்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிசு பார்த்தான்.
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்? ஆனந்த வாரியேகொல்?
என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார், அது ஓர்வார்?
இராமன் திருவடிகளில் இந்திரசித்தின் தலையை வைக்க, அவன் களிப்புக் கொள்ளுதல்
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் -
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில் விட, எயிற்றின் கூட்டம்
அழுந்துற, மடித்த பேழ் வாய்த் தலை அடியுறை ஒன்று ஆக.
மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்;
சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த
கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான்.
இராமன் திருவடிகளில் இலக்குவன் வணங்குதலும், இராமன் தம்பியைத் தழுவிப் போற்றுதலும்
நாள் வெயில் பரந்தது என்ன, நம்பிதன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில் தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று இல்லான்.
வீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் - தழுவிப் பல்கால், பொன் தடந் தோளின் ஒற்றி.
வீடணனை இராமன் புகழ்ந்து பேசி, இனிது இருத்தல்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால்.